கோகிலன் : பக்காத்தானே பத்து மலை கொண்டோவுக்கு அனுமதி வழங்கியது

செலாயாங் ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினரான கோகிலன் பிள்ளை பழியை பக்காத்தான் ரக்யாட்மீது போட்டு அதுதான் பத்து மலையில் 29-மாடி கொண்டொமினியம் கட்ட அனுமது கொடுத்தது என்கிறார்.

2007-இல் தாம் அம்மன்றத்தில் இருந்தபோது அங்கீகரிப்பட்டது திட்டமிடல் அனுமதி மட்டுமே என்றாரவர். அதுதான் முதல் அனுமதி. ஒரு கட்டிடம் கட்ட அதுபோல் பல அனுமதிகள் தேவை.

“அதற்கான விண்ணப்பத்தில் என்ன செய்யப்போகிறார்கள், எத்தனை மாடிகள் கட்டப்படும் போன்ற விவரங்கள் இருக்க மாட்டா.

“ஆனால், 2008-இல்தான் 29-மாடி கட்டிடத்துக்கு அனுமதி கேட்டு (ஊராட்சி மன்ற) ஓரிட மையத்தில் விண்ணப்பம் செய்தார்கள்.

“அதன்பின்னரே விற்பனை அனுமதி முதலிய மற்ற அனுமதிகள் வழங்கப்பட்டன”. இன்று பத்து மலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய  வெளியுறவு துணை அமைச்சருமான  கோகிலன் இவ்வாறு கூறினார்.

நேற்று சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயகுமார், கொண்டொமினியம் கட்டுவதற்கு 2007 ஆகஸ்டில் பிஎன் மாநில அரசுதான் அனுமதி வழங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

கொண்டொ-எதிர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டது என்றும்  கொண்டோ விற்பனை அலுவலகம் பத்துமலை கோயிலுக்கு அருகில் நான்கு ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது, அப்போதெல்லாம் ஆலய நிர்வாகக் குழு எதிர்ப்பு தெரிவித்ததில்லை என்றும் சேவியர் கூறினார்.