நஜிப்: உருமாற்றங்கள் வெற்றி அளித்த பின்னரே 13வது பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும்

GEதேசிய உருமாற்றக் கொள்கைகள் உண்மையில் வெற்றியடைந்து மக்களுக்கு முழுமையாக நன்மை அளித்திருக்க வேண்டும் என அரசாங்கம் விரும்புவதால் 13வது பொதுத் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொல்கிறார்.

மக்களுடைய போராட்டத்தை முன்னின்று நடத்தவும் நாட்டுக்கு நன்மையைக் கொண்டு வரவும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு விரிவாகத் திட்டமிடுவதும் திறமையாக அமலாக்குவதும் முக்கியம் என அவர்  சொன்னார்.

“அதானால்தான் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. தேசிய உருமாற்றக் கொள்கைகள் உண்மையில் வெற்றி அடையும் என்பதை நான் நிரூபிக்க விரும்புவதால் நாம் காத்துக் கொண்டிருக்கிறோம்.”

நஜிப் இன்று சிரம்பான் சென்ட்ரலில் ஒரே மலேசியா மக்கள் வீடமைப்புத் திட்டத்தைத் தொடக்கி வைத்த போது அவ்வாறு கூறினார்.

அந்த நிகழ்வில் பிரதமரின் மனைவி ரோஸ்மா மான்சோர், நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகமட் ஹசான், தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம், ஒரே மலேசியா மக்கள் வீடமைப்புத் திட்டத் தலைவர் ஜமாலுதின் ஜார்ஜிஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

எனவே மக்களுடைய அவாக்களை பாரிசான் நேசனல் அரசாங்கம் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்பதால் மக்கள் 13வது பொதுத் தேர்தலில் ஆளும் அரசாங்கத்தை மாற்றக் கூடாது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

 

TAGS: