ஒப்ஸ் டவுலாட்டின் ஏழாம் நாள்: இன்றுவரை 97பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

1polis

சாபாவில் ஒப்ஸ் டவுலாட் தொடங்கி இன்று ஏழாவது நாள். இந்நடவடிக்கையின்கீழ் இதுவரை 97 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

1polis1கைது செய்யப்பட்டவர்களுக்கு ‘அரச சூலு இராணுவம்’ என்று சுயமாக பிரகடனம் செய்து கொண்டிருப்போருடன் தொடர்பிருக்கலாம் என நம்பப்படுவதாக சாபா போலீஸ் கமிஷனர் ஹம்சா தாயிப் (இடம்) கூறினார்.

“தேசிய போலீஸ் படைத் தலைவர் (இஸ்மாயில் ஒமார்) கூறியிருப்பதுபோல், (பயங்கரவாத செயல்கள் தொடர்பான குற்றவியல் சட்டத்தின்) பகுதி 130 (சி)-இன்கீழ் அவர்கள்மீது விசாரணை மேற்கொள்ளப்படும்.”,என்று லாஹாட் டத்து, பெல்டா சஹாபாட் கடலோர ஓய்வுத்தலத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் சொன்னார்.

நேற்றுக் காலை 4 மணிக்கு முடிவடைந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் மேலும் ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஹம்சா தெரிவித்தார். அதைச் சேர்த்து இதுவரை கொல்லப்பட்டவர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 22 சடலங்கள் பிணப் பரிசோதனைக்காக தாவாவிலும் லாஹாட் டத்துவிலுமுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஆயுதம் தாங்கிய ஊடுருவல்காரர்களின் தலைவர் அஸ்ஸிமுடி கிராம், பாதுகாப்புப் படையினரின்  முற்றுகையிலிருந்து தப்பி, சம்பூர்னாவில் பதுங்கி இருப்பதாக நியு ஸ்ட்ரேய்ட்ஸ் டைம்ஸில் வெளிவந்துள்ள செய்தி உண்மையா என்று கேட்டதற்கு ஹம்சா சட்டென்று அதை ஒதுக்கித் தள்ளினார்.

“அவர் சம்பூர்னாவில் இருப்பது தெரிந்தால் எப்போதோ அவரைக் கைது செய்திருப்பேனே”, என்றாரவர்.

கம்போங் தண்டுவோவில் போலீஸ் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்து விட்டன என்றும் அங்கு குடியிருப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லலாம் என்றும் ஹம்சா தெரிவித்தார்.

“இப்போது தஞ்சோங் பத்துவிலும் கம்போங் சுங்கை பீலீசிலும் கவனம் செலுத்தி வருகிறோம்”, என்று கூறியவர், ஒப்ஸ் டவுலாட் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை.

அவ்விரு கிராமங்களும் கம்போங் தண்டுவோவுக்கு அருகில் உள்ளன.

நடவடிக்கை பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் எல்லாருமே துயர்துடைப்பு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக ஹம்சா கூறினார்.

இறந்துபோன பதின்ம வயதினன் அடையாளம் ஆராயப்படுகிறது

இதனிடையே, நேற்றுக் காலை சிவப்புப் பகுதியில் ஊடுருவல்காரர்களைத் தேடிப் பிடிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட பதின்ம வயது இளைஞனை அடையாளம் காண போலீஸ் முயன்று வருகிறது.

குற்றவியல் புலனாய்வுத் துறை அம்முயற்சியில் ஈடுபபட்டிருப்பதாக ஹம்சா குறிப்பிட்டார்.

நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படைகள் சிவிலியன்களையும் கருவுற்ற தாய்மார்களையும் நோக்கிச் சுட்டதாக பிலிப்பீன் ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகளை அவர் மறுத்தார்.

“அதை நான் வன்மையாக மறுக்கிறேன். நேற்று நடந்ததைப் பாருங்களேன். பாதுகாப்புப் படையினர் சுட நினைத்திருந்தால் எவரையும் கைது செய்திருக்க வேண்டிய அவசியமில்லையே”, என்றார். பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸ் புகார் எதுவும் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.