தாயிப் சரவாக் மீதான தமது பிடியை இறுக்கியுள்ளார்

taibசரவாக்கில் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் பதவி துறக்க வேண்டும்  என்ற கோரிக்கைகள் மங்கி விட்டன.

அவரது Parti Pesaka Bumiputra Bersatu (PBB)-யும் சரவாக் பிஎன் -னும்
கூட்டரசு மாநிலத் தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்றதே அதற்குக்
காரணமாகும்.

13வது பொதுத் தேர்தலில் PBB 14 நாடாளுமன்றத் தொகுதிகளையும் 2011  சட்டமன்றத் தேர்தலில் சரவாக் பிஎன் 31 இடங்களில் 25 தொகுதிகளையும்  பிடித்ததையும் சரவாக் மலேசியப் பல்கலைக்கழக அரசியல் ஆய்வாளர் டாக்டர்  பைசால் எஸ் ஹாஸிஸ் சுட்டிக் காட்டினார்.

“13வது தேர்தலுக்கு முன்னரே அந்தக் கோரிக்கைகள் மங்கத் தொடங்கி விட்டன.  இப்போது தாயிப் கைகள் மேலோங்கி விட்டன. அவர் எப்போதும் புன்னகையுடன்  காணப்படுகிறார். தாம் விரும்பினால் மட்டுமே அவர் விலகிச் செல்வார். அவரது  உடல் நிலையும் அவரை ஒரு வேளை விலகச் செய்யலாம்,” என அவர்  மலேசியாகினியிடம் கூறினார்.

முதலமைச்சர் மீதும் அவரது குடும்பத்தினரும் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள்  சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் தாயிப்பின்  அதிகாரப் பிடியை உடைப்பதற்கு பிஎன் தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல்  ரசாக் முயற்சி செய்தார்.

ஆனால் கூட்டரசுத் தேர்தல் முடிவுகள் பிஎன் -னில் PBB கட்சியை இரண்டாவது  பெரிய கட்சியாக உயர்த்தி விட்டன. அந்த இடத்தை வகித்த மசீச -வுக்கு ஏழு  நாடாளுமன்றத் தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.

அதனால் அடுத்த மாநிலத் தேர்தலுக்குப் பின்னரும் தாயிப் நீடித்தால்
ஆச்சரியப்படுவதற்கு இல்லை என பைசால் சொன்னார்.

 

TAGS: