மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் வர்த்தகத்தில் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால், மலேசியர்கள் தங்களது செலவினங்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
இங்கு நடைபெற்ற வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய நிலவரத்தை அரசாங்கம் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார்.
“நான் ஏற்கனவே அறிவித்தபடி, RON95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என்ற அளவில் தக்கவைக்க முயற்சிப்போம். அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு எங்களால் இதனைச் சமாளிக்க முடியும், ஆனால் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் ஊக்கமளிப்பதாக இல்லை,” என்று அவர் கூறினார்.
பொதுமக்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் நான் வலியுறுத்துகிறேன். ஏனெனில், மத்திய கிழக்கில் நீடித்து வரும் இந்த மோதல் போக்கு, நாம் முன்பு எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியாக உருவெடுக்கக்கூடும்.
“மலேசியர்கள் மெத்தனமாக இருக்கக்கூடாது அல்லது தங்களது செலவுகளில் வீண் விரயம் செய்யக்கூடாது என்று நான் விரும்புகிறேன்,” என அவர் கூறினார்.
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல 200-க்கும் மேற்பட்ட கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அன்வார், இது வர்த்தகத்தைப் பாதிப்பதோடு விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும்.
இந்தச் சூழல் நீடித்தால் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கத்தைத் தவிர்க்க முடியாது என்பதால், அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கும். பொருட்கள், இறக்குமதி மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் உயரும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுத்ததைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை அந்த நீரிணையைக் கடக்கும் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தக் குறுகிய நீரிணை உலகின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதிப் பாதையாகும். இது சவுதி அரேபியா, ஈரான், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மிகப் பெரிய வளைகுடா எண்ணெய் உற்பத்தி நாடுகளை ஓமன் வளைகுடா மற்றும் அரபிக்கடலுடன் இணைக்கிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை, பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா நசீர், மானியம் வழங்கப்பட்ட RON95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என்ற அளவிலேயே அரசாங்கம் தொடர்ந்து தக்கவைக்கும் என்று தெரிவித்தார்.
மத்திய கிழக்கு மோதலானது, தற்போதுள்ள அரசாங்கக் கொள்கைகளில் பாரிய மாற்றங்களைச் செய்வதற்கான வலுவான அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை என்று அவர் கூறினார்.
-fmt
























