இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் ஜொகூர் மாநிலத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் தனித்துப் போட்டியிட விரும்புவதாக வெளியான செய்தியை ஜொகூர் மாநில பிகேஆர் தலைவர் டாக்டர் ஜாலிகா முஸ்தபா நிராகரித்துள்ளார்.
தனது முகநூல் பதிவில் இது குறித்து கருத்து தெரிவித்த ஜாலிகா, இந்தத் தகவல்கள் உண்மையற்றவை, ஊக அடிப்படையிலானவை மற்றும் இவை பிகேஆர் அல்லது பக்காத்தான் ஹராப்பானின் உண்மையான நிலப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை.
மக்களுக்கான சீர்திருத்தக் கொள்கைகளின் நிலைத்தன்மையையும் தொடர்ச்சியையும் உறுதி செய்வதற்காக, மாநிலத்தில் உள்ள பக்காத்தான் ஹராப்பான் உறுப்புக் கட்சிகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் ஜொகூர் பிகேஆர் உறுதியாக இருப்பதை செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் வலியுறுத்தினார்.
ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான எந்தவொரு மூலோபாய முடிவுகளும் கட்சியின் தலைமைத்துவத்திற்குள் முறையான பேச்சுவார்த்தை செயல்முறையின் மூலமே எடுக்கப்படும்; மேலும் இது பக்காத்தான் ஹராப்பானின் மாநில மற்றும் தேசிய மட்டங்களிலும் விவாதிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
ஜோகூர் பிகேஆர்-இன் முன்னுரிமை என்பது, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து அடிமட்ட அளவிலான பணிகளை வலுப்படுத்துவதே ஆகும் என்றும் ஜாலிகா வலியுறுத்தினார். மேலும், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றை எதிர்கொள்வதில், மக்களுக்குப் பயனளிக்கும் மத்திய அரசின் முயற்சிகள் மற்றும் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதும் தங்களின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
யூகங்களை உருவாக்க வேண்டாம் அல்லது ஆதாரமற்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று அனைத்துத் தரப்பினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இத்தகைய செயல்கள், குறிப்பாக மாநில அளவிலான அரசியல் ஸ்திரத்தன்மை மீதோ அல்லது கட்சிகளுக்கு இடையே நிலவும் ஒத்துழைப்பு மீதோ பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வளர்க்க உதவாது,” என்று அவர் கூறினார்.
பக்காத்தான் ஹராப்பான் மாநிலத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பான ஆலோசனைகள் கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூரில் அக்கட்சியின் உயர்மட்டத் தலைமைத்துவத்திற்கு இடையே நடைபெற்றதாகவும் செய்தி இணையதளம் ஒன்று நேற்று ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருந்தது.
-fmt
























