சிலாங்கூர் மாநில பெரிகாத்தான் நேஷனல் தலைவராக அஸ்மின் அலியை பெர்சத்து கட்சி முன்மொழிகிறது.

முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி மாநில சட்டமன்றத்தில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் என்று கட்சியின் தலைவர் முகிடின்யாசின் கூறினார்.

பெர்சத்து தலைவர் முகிடின் யாசின், அஸ்மின் அலி ஏற்கனவே PN தலைவராக இருந்தவர், எனவே ‘அவர் தொடர்ந்து ஒரு தலைவராக பணியாற்ற வேண்டும்’ என்று கூறினார்.

பெர்சத்து கட்சித் தலைவர் முகிடின்யாசின் மற்ற ஐந்து மாநிலங்களுக்கான தலைவர்களின் பெயர்களைச் சமர்ப்பித்துள்ள நிலையில், அஸ்மின் அலியை மீண்டும் சிலாங்கூர் மாநில பெரிகத்தான் நேஷனல் (PN) தலைவராக நியமிக்க பெர்சத்து முன்மொழிந்துள்ளது.

அஸ்மின் தற்போது மாநிலச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால் அவர் பரிந்துரைக்கப்பட்டதாக முகிடின் கூறினார். “அவர் ஒரு PN தலைவராக இருந்தார், எனவே அவர் தொடர்ந்து அதே பணியைச் செய்ய வேண்டும்,” என்று இன்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் பெர்சத்து மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு முகிடின் செய்தியாளர்களிடம் கூறினார்.

2014 முதல் 2018 வரை சிலாங்கூர் மாநில முதல்வராக (Menteri Besar) பணியாற்றிய அஸ்மின், முகிடின் கூட்டணித் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவைத் தொடர்ந்து, ஜனவரி 1-ஆம் தேதி சிலாங்கூர் பெரிக்காத்தான் நேஷனல் (PN) தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்களுக்கான PN தலைவர்களின் பட்டியலைக் கூட்டணித் தலைவர் அகமது சம்சுரி மொக்தாரிடம் சமர்ப்பித்துள்ளதாக முகிடின் தெரிவித்தார். இருப்பினும், மற்ற வேட்பாளர்களின் விபரங்களை அவர் வெளிப்படுத்தவில்லை.

மற்றொரு விஷயத்தில், அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை எதிர்க்கட்சிக் கூட்டணி கைப்பற்றும் என்பதில் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக முகிடின் கூறினார்.

“வெற்றி பெற எங்களுக்கு இன்னும் ஏழு இடங்கள் மட்டுமே தேவை,” என்று அவர் கூறினார். தற்போது சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தின் 56 இடங்களில் பெர்சத்து (11) மற்றும் பாஸ் (10) மூலம் PN 22 இடங்களைக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு, அடுத்த மாநிலத் தேர்தலில் PN மேலும் 10 இடங்களை வெல்லும் திறன் கொண்டது என்று அஸ்மின் கூறியிருந்தார்.

அடுத்த மலாக்கா தேர்தலில் 15 மாநிலத் தொகுதிகளில் போட்டியிடும் பாஸின் விருப்பத்தைப் பற்றிக் கேட்டபோது: “நாங்கள் அதை விவாதிப்போம். பெர்சத்துவும் தான் போட்டியிட விரும்பும் இடங்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்கலாம்,” என்று முகிடின் கூறினார்.