மாநிலத் தேர்தலில் பிரசாரம் செய்யும்போது, ஆணவமாக பேச வேண்டாம் என்று DAP பொதுச்செயலாளரும் அமைச்சரவைச் சக உறுப்பினருமான ஆண்டனி லோக், (BN) தலைவர் அகமத் ஜாஹித் ஹமிடிக்கு அறிவுறுத்தியுள்ளார்.
BN வேட்பாளர் ஜான் சியோவை (John Siow) எதிர்த்துப் போட்டியிடும் லோக், தொடர்ந்து மூன்று முறை அப்பகுதியின் மக்கள் பிரதிநிதியாக இருந்தும் வளர்ச்சி எதையும் கொண்டு வரத் தவறிவிட்டார் எனக் கூறி, அவரைத் தோற்கடிக்குமாறு (வாக்களித்து வெளியேற்றுமாறு) ஜாஹித் கூறியதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
இன்று காலை ‘தித்தி’ பொதுச் சந்தையில் நடைபெற்ற நடைபயணப் பிரசாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து அமைச்சரான லோக், “தொகுதியில் தனது சேவையைப் பற்றி வாக்காளர்களுக்கு நன்றாகத் தெரியும். என்னை வீட்டிற்கு அனுப்புவதா இல்லையா என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள்,” என்று கூறினார்.
“முதலில், அமைச்சரவையின் சக உறுப்பினர்களாக இருக்கும் நாம், இத்தகைய செருக்கான பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்”.
சென்னா தொகுதியின் தற்போதைய உறுப்பினர் அந்தோனி லோக், தேர்தல் பிரச்சாரத்தில் தனது தொகுதி மக்களைச் சந்தித்து வருகிறார்.
நாங்கள் நேர்மறையான வழியில் பிரசாரம் செய்கிறோம். தோற்கடிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்படுவதா (dibungkus) இல்லையா என்பதை மக்களே முடிவு செய்வார்கள். வாக்காளர்களே அந்த முடிவை எடுப்பார்கள்,” என்று லோக் மேலும் சேர்த்துக் கொண்டார்.
டிஏபி தலைவரின் கூற்றுப்படி, சென்னா ஒரு கிராமப்புறத் தொகுதியாகும்; அதற்கு பல உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றன. தாம் அந்த மாநிலத் தொகுதியைக் கைப்பற்றியதிலிருந்து பல மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.
‘கூட்டுப் பொறுப்பை மறந்துவிடாதீர்கள்’
சென்னா தொகுதி, நெகிரி செம்பிலான் BN தலைவர் ஜலாலுதீன் அலியாஸ் வசமுள்ள ‘ஜெலபு’ நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது என்பதையும் ஜாஹித்திற்கு லோக் நினைவூட்டினார்.
“சென்னா தொகுதி ஜெலபுவின் ஒரு பகுதி என்பதை மறந்துவிடாதீர்கள், எனவே இங்கு மேம்பாடு கொண்டு வருவது ஒரு கூட்டுப் பொறுப்பாகும்,” என்று அவர் கூறினார்.
BN தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி
நேற்று ‘சிம்பாங் டுரியான்’ பகுதியில் நடைபெற்ற பிரசார நிகழ்வொன்றில் பேசிய ஜாஹித், லோக்கைத் தோற்கடித்து (kasi bungkus), தொகுதிக்கு வளர்ச்சியைக் கொண்டுவர BN வேட்பாளருக்கு வாய்ப்பளிக்குமாறு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.
“சியோதான் சென்னாவின் புதிய நம்பிக்கை. அவர் சென்னாவில் வெற்றி பெற்று இத்தொகுதிக்கு வளர்ச்சியைக் கொண்டு வருவார்,” என்று அம்னோ தலைவர் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் கூறினார்.
நெகிரி செம்பிலான் வாக்காளர்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வாக்களிக்கவுள்ளனர்.
























