“விளக்கம் அளிக்கப்படும் வரை, அந்த வளாகத்தில் நடைபெற்று வந்த செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன,” என்று நிர்வாகக் குழு உறுப்பினர் ஜஃப்னி ஷுகோர் தெரிவித்தார்.
மலேசிய தேசியக் கொடி (ஜாலூர் கெமிலாங்) மற்றும் ஜொகூர் மாநிலக் கொடியைத் தலைகீழாகப் பறக்கவிட்டதற்காக ஒரு தொழிற்சாலை மூடப்பட்டது.
ஜொகூர், கூலாயில் உள்ள தொழிற்சாலை ஒன்று, மலேசியாவின் தேசியக் கொடியான ‘ஜாலூர் கெமிலாங்’ (Jalur Gemilang) மற்றும் ஜொகூர் மாநிலக் கொடியைத் தலைகீழாகப் பறக்கவிட்டதைத் தொடர்ந்து, அதைத் தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசியக் கொடியும் மாநிலக் கொடியும் நாட்டின் மற்றும் மாநிலத்தின் அடையாளம், கண்ணியம் மற்றும் இறையாண்மையைப் பிரதிபலிப்பதால், இந்தச் சம்பவத்தை மாநில அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாக ஜோகூர் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி மன்றக் குழுத் தலைவர் ஜாஃப்னி ஷுகோர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தை ஒரு சிறிய தவறு என்று அலட்சியப்படுத்த முடியாது என்றும், இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து விளக்கம் வரும் வரை, கூலாய் நகராட்சியால் அந்தத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.
இந்தத் தவறு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இரு கொடிகளும் உடனடியாகச் சரியான முறையில் மாற்றி ஏற்றப்பட்டதாகத் தெரிவித்த ஜாஃப்னி, சட்டங்கள் அல்லது உரிம நிபந்தனைகள் ஏதேனும் மீறப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்து உரிய நடவடிக்கை எடுக்க, கூலாய் மாவட்ட அதிகாரி நகராட்சி மற்றும் பிற முகமைகளுடன் இணைந்துச் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
“சட்டம் அல்லது உரிம நிபந்தனைகள் மீறப்பட்டிருந்தால், எவ்விதப் பயமோ அல்லது பாரபட்சமோ இன்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று பெரித்தா ஹரியான் (Berita Harian) செய்தித் தளத்திடம் அவர் கூறினார்.
வியாபாரிகள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் கொடிகளைச் சரியாகவும் பொறுப்புடனும் ஏற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று எச்சரித்த ஜாஃப்னி, மாநில மற்றும் தேசியச் சின்னங்களுக்கு உரிய மரியாதையைச் செலுத்தத் தவறுவதற்குக் கவனக்குறைவு ஒரு காரணமாகாது என்றும் அவர் கூறினார்
























