உலகம் சமநிலை பெற வேண்டும்; இன்று ஐ.நா. நாள்!

ஆண்டுதோறும் அக்டோபர் 24-ல் ஐ.நா., நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் நோக்கம், சாதனை, எதிர்காலத் திட்டம் போன்றவற்றை மக்களிடம் சேர்ப்பது இத்திட்டத்தின் நோக்கம்.

முதல் உலகப் போர் நடந்தபோது, அது போல் மீண்டும் ஒரு பயங்கரம் நடக்கக் கூடாது என உலக நாடுகள் எண்ணின. அதற்காக உலக நாடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்க முயற்சித்தனர். அது தோல்வியில் முடிந்தது. அதன் பின் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டு உலகில் பேரழிவை ஏற்படுத்தியது.

“இனி இன்னொரு போர் உலக நாடுகளிடையே ஏற்பட்டுவிடக் கூடாது. உலகில் அமைதியும் சமநிலையும் ஏற்பட வேண்டும்” என்பதற்காக 1945 ஏப்ரல் 25 மற்றும் ஜூன் 26-ல் சான்பிரான்சிஸ்கோ நகரில் உலக நாடுகளின் கூட்டம் நடந்தது. அதன் விளைவாக ஐக்கிய நாடுகள் மன்றம், 1945 அக்டோபர் 24-ல் தோற்றுவிக்கப்பட்டது.

இம்மன்றம் முறைப்படி செயல்படத் துவங்கிய அக்டோபர் 24 தேதி, அனைத்துலக நிலையில் ஐ.நா. நாளாக அறிவிக்கப்பட்டது. ஐ.நா மன்றம் தொடங்கப்பட்டபோது 51 உறுப்பு நாடுகள் இருந்தன. தற்போது 193 நாடுகளாக உயர்ந்துள்ளன.