முகைதின் வீட்டில் முக்ரீஸ்!

 

Mukriz arrivesஇன்றிரவு மணி 8.35 அளவில் கெடா மந்திரி புசார் முக்ரீஸ் மகாதிர் துணைப் பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ள முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அவரது இவ்வருகை பல ஊகங்களுக்கு இடமளித்துள்ளது.

முக்ரீஸ் அங்கு குழுமியிருந்த ஏராளமான செய்தியாளர்களிடம் எதுவும் கூறாமல் நேராக முகைதினின் வீட்டிற்குள் சென்று விட்டார்.

அதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாக தமது வீட்டிலிருந்து வெளியே வந்த முகைதின் முதன்முறையாக செய்தியாளர்களிடம் பேசினார். தமக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் அவர் நன்றி கூறினார்.

அமைதியாகக் காணப்பட்ட முகைதின் நாளை காலையில் நடைபெறவிருக்கும் செய்தியாளர் கூட்டத்தில் முழு விளக்கம் அளிக்கப்படும் என்று கூறினார்.

“நான் எனது அறிக்கையை முன்னதாக வெளியிட்டிருந்தேன். ஊடகங்கள் அதனை வெளியிட்டுள்ளன. இன்றிரவு நான் எவ்வித அறிக்கையும் வெளியிடப் போவதில்லை.

“நாளை காலை மணி 11.00 க்கு அனைத்து ஊடகங்களையும் அழைத்து அக்கூட்டத்தில் நான் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கு எனது பதிலையும் விளக்கத்தையும் அளிப்பேன்”, என்று முகைதின் செய்தியாளர்களிடம் கூறினார்.