நஜிப் சம்பளத்தில் பிடித்தம் செய்வது பற்றிய தீர்மானம் மீதான விவாதத்தில் அனல் பறந்தது

நஜிப்பின் ஒரு மாத சம்பளத்தைப் பிடித்து வைப்பது பற்றிய தீர்மானம் மக்களவையில் விவாதிக்கப்பட்ட போது அனல் பறந்தது. சபாநாயகர் பண்டிக்கார் அமின் முலியா கூட பொறுமை இழந்து விட்டார்.

நிரந்தர ஆணைகள் 66(6)ன் கீழ் பிகேஆர் பத்து எம்பி தியான் சுவா அந்த தீர்மானத்தை சமர்பித்திருந்தார். நஜிப்பின் அரசாங்க நிர்வாகத்தில் காணப்படுகின்ற “பிரச்னைகளையும்  பலவீனங்களையும்” அவர் குறிப்பிட்டிருந்தார். அந்தத் தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்தில் எம்பிக்களினால் ஆத்திரமூட்டப்பட்டதால் சபாநாயகர் மிகவும் சினமடைந்தார்.

அந்தத் தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளில் நிராகரிக்கப்பட்டது.

தமது அனுமதியைக் கோராமல் எம்பி-க்கள் அவை நடவடிக்கைகளில் குறுக்கிட்டதால் பண்டிக்கார் ஆத்திரமடைந்தார்-  சபாநாயகருடைய அனுமதியைப் பெறாமல் பேசுவது நாடாளுமன்ற நிரந்தர ஆணைகளுக்கு முரணானதாகும். ஆனால் அவ்வாறு பேசுவது மக்களவையில் வழக்கமாகி விட்டது.

எம்பி-க்கள் விதிகளை பின்பற்ற தவறும் வேளையில் தமது வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என தமக்கு “உத்தரவிட” முயலும் எம்பி-க்களையும் சபாநாயகர் சாடினார்.

குறிப்பாக தங்களது விவாதங்களில் எம்பி-க்கள், பெயர்களைக் குறிப்பிடுவதும் முட்டாள் (போடோ) போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் அடிக்கடி ஒழுங்கில்லாமல் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டங்களில் வழக்கமான சம்பவங்களாகி விட்டதாக பண்டிக்கார் சொன்னார்.

அதனால் ஆத்திரமடைந்த சபாநாயகர், எம்பி-க்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் இனிமேல் நாடாளுமன்ற விதிமுறைகளைக் கடுமையாக அமலாக்கப் போவதாகவும் சூளுரைத்தார்.

சர்ச்சைக்குரிய விவாதங்களில் தகராறு மூளுவதைத் தடுக்கும் பொருட்டு பண்டிக்கார் ஒவ்வொரு பேச்சாளருக்கும் பத்து நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என அறிவித்தார்.

தியான் சுவாவும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர் ஒருவரும் விவாதத்தைத் தொடங்குவதற்கு அவர் அனுமதித்தார். அதனைத் தொடர்ந்து பிஎன் பின்னிருக்கை உறுப்பினர்களில் இருவர் பேசிய பின்னர் பிரதமர் துறை அமைச்சர் ஒருவர் பதில் அளிக்கவும் அவர் அனுமதித்தார்.

“தேசிய ஆளுமையில் அவருக்கு ஏற்பட்ட தோல்விகளுக்காகவும் வெளிநாடுகளில் மலேசியாவின் தோற்றத்துக்கு ஏற்பட்டுள்ள களங்கத்திற்காகவும் அவரது நிர்வாகம் பின்பற்றுகிற அவதூறான கலாச்சாரத்திற்காகவும்” பிரதமருடைய சம்பளத்தில் 22,826.65 சென்னை- ஒரு மாதச் சம்பளத்துக்கு இணையானது- பிடித்தம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளும் அந்தத் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.