அடுத்த மாதம் அம்னோ பொதுப் பேரவையின்போது அதன் துணைத் தலைவர் முகைதின் யாசின் கட்சியின் இளைஞர், மகளிர் பிரிவுக் கூட்டங்களைத் தொடக்கி வைக்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி கிண்டலடித்தார்.
“எங்கள் கட்சியில் மரபு தொடர்கிறது. அம்னோவைப் போல் அல்லாமல் துணைத் தலைவரே இளைஞர், மகளிர் கூட்டங்களைத் தொடக்கி வைப்பார்”, என்றாரவர்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கட்சியின் இளைஞர், மகளிர் கூட்டங்களை முகைதின் தொடக்கி வைக்க மாட்டார் என்று அறிவித்திருந்தார்.
வழக்கத்துக்கு மாறாக அந்தந்தப் பிரிவுத் தலைவர்களே கூட்டங்களைத் தொடக்கி வைப்பார்கள் என நஜிப் கூறினார்.
“அப்பிரிவுகளே இதைப் பரிந்துரைத்தன. அவர்களின் விருப்பத்தை மதிக்கிறோம்”, என்றவர் கூறினார்.