நஜிப்: தொடர்ந்து தலைமைத்துவம் வழங்கும் கடப்பாடு எனக்கு உண்டு

 

 அம்னோ தலைவர் பதவியைத் துறப்பது கோழைத்தனமானதும் பொறுப்பற்றதுமாகும் என்று நஜிப் அப்துல் ரசாக் கருதுகிறார்.

எழுந்துள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் கட்சியின் நிலை, அதன் உறுப்பினர்கள் பழைய நிலைக்குத் திரும்புவது ஆகியவற்றை முதலில் உறுதி செய்யாமல் நமது இலக்கையும் பணித்திட்டத்தையும் தம்மால் கைவிட்டுவிட முடியாது என்று நஜிப் அம்னோ ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய தலைமை உரையில் கூறினார்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு நீடித்த அவரது உரையில், நஜிப் ஒரு தலைவரின் கடமைகள், தலைவருக்கு உரியவை மற்றும் அம்னோ ஒன்றுபட்டிருக்க வேண்டியதற்கான தேவை ஆகியவற்றை குறிப்பிட்டார்.

“சவால்கள் எவ்வளவு கரடுமுரடானதாகவோ அச்சுறுத்துவதாகவோ இருந்தாலும், நான் விட்டுக்கொடுக்க முடியாது. எழும் பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொண்டு அவற்றை தீர்த்து அம்னோவை தொடர்ந்து வழிநடத்தி வெற்றிக்கு இட்டுச்செல்ல” தாம் தயாராக இருப்பதாக நஜிப் கூறினார்.

எட்ரா நிறுவனத்தை விற்றதன் மூலம் 1எம்டிபியின் கடனில் ரிம17 பில்லியன் குறைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைக்கப்பட்ட ரிம2.6 பில்லியன் பற்றி குறிப்பிட்ட நஜிப், நாடாளுமன்றம் மற்றும் அம்னோ பேராளர்களுக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தைச் சுட்டிக் காட்டி, அது வெளிநாட்டிலிருந்து வந்த அரசியல் நன்கொடை என்றும், 1எம்டிபியிடமிருந்து வரவில்லை என்றும் கூறினார்.

உயர்மட்ட தலைமைத்துவதற்கு காட்ட வேண்டிய விசுவாசம் பற்றி அம்னோ பேராளர்களுக்கு நினைவுறுத்திய நஜிப், அக்கோட்பாடு இஸ்லாத்தில் நீண்டகாலமாக பின்பற்றப்படும் நடைமுறையாகும் என்றார்.

அவரே இந்த விசுவாச கோட்பாட்டை 1987 ஆம் ஆண்டில் அம்னோவில் ஏற்பட்ட பிளவின் போது பின்பற்றி தமது அம்னோ தலைவர் பதவி மற்றும் பிரதமர் பதவி ஆகியவற்றை தற்காத்து போட்டியிட்ட மகாதிர் முகமட்டுக்கு விசுவாசமாக இருக்க தீர்மானித்ததாக நஜிப் கூறினார்.

அடுத்து, அம்னோ தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் இடையிலான உறவைக் குறிப்பிட்ட நஜிப், தலைவர் கடமைகளை ஆற்ற உதவுவது துணைத் தலைவரின் பணி என்றார்.

தமது தலைமைத்துவத்தின் கீழ் மலேசியா தோல்வி கண்ட நாடாகி விட்டது என்று கூறப்படுவதை மறுத்ததோடு 144 நாடுகளின் பொருளாதார நிலையில் மலேசியா 18 ஆவது நிலையில் இருக்கிறது என்றார்.

அம்னோ உறுப்பினர்கள் கட்சியின் உயர்மட்ட தலைமைத்துவதற்கு ஆதரவு அளிப்பதன் வழி ஒற்றுமை பேண வேண்டும் என்று அறைகூவல் விடுத்த நஜிப், “பின்வாங்கல் இல்லை, சரணடைதல் இல்லை”, என்று முழங்கினார்.