புவாட்: முகைதின் யாசின் ஒரு கபட வேடதாரி

 

puadandmohyddinபிரதமர் நஜிப் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா பற்றி பேசுவதற்கு முன்பு பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் அவரது வீட்டை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும் என்று சிறப்பு விவகாரங்கள் இலாகாவின் தலைமை இயக்குனர் முகமட் புவாட் ஸார்காசி கூறினார்.

பல விவகாரங்கள் இருக்கின்றன. அவற்றில், ஒரு திருமணமான பெண்ணுடன் முகைதினுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும். அடுத்து, அவரது குடும்பச் சொத்துகள் பற்றிய விபரங்களை அறிவிக்க வேண்டும். நேர்மை பற்றி பாசாங்கு செய்வதற்கு முன்னதாக அவர் இவற்றுக்கு பதில் கூறவேண்டும்.

“பாசாங்கு பண்ணாதீர். நீர் யார் என்பது பற்றி எல்லாருக்கும் தெரியும். இந்தப் பாசாங்கு காரணமாகத்தான் பக்கத்தான் ஹரப்பான் உம்மை (அவர்களின்) தலைவராக ஏற்க மறுத்துள்ளது”, என்று முகமட் புவாட் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

நிக்கா கீ சியு யீ என்பவருடன் முகைதின் உறவு கொண்டிருப்பதாக அவரின் முன்னாள் கணவர் ஸ்டேன்லி கிளமெண்ட் அகஸ்டின் குற்றம் சாட்டியுள்ளதோடு அது பற்றிய இரண்டு சத்தியப்பிரமாணங்களை வெளியிட்டுள்ளதாகவும் வலைப்பதிவாளர் ராஜா பெட்ரா கமாருடின் வெளிப்படுத்தியுள்ளார்.

எனினும், முகைதின் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதோடு இது அவரது அரசியல் எதிரிகளின் சதி என்று கூறியுள்ளார்.

அரசாங்கத்திடமிருந்து அவரது உறவினர்கள் நன்மையடைந்துள்ளனர் என்றும் முகைதினுக்கு எதிரான குற்றச்சாடுகள் கூறுகின்றன.

நேற்று, முகைதின் யாசின் 1எம்டிபி விவகாரங்கள் பற்றி சட்டத்துறை தலைவர் அபாண்டி அலி எந்த நடவடிக்கையும் எடுக்க்காமல் இருப்பதைக் குறைகூறியிருந்தார். அதற்கு எதிர்வினையாக முகமட் புவாட் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முகமட் புவாட்டின் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துரைக்குமாறு முகைதின் யாசின் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.