ஜி25-ன் புத்தகம் தடைசெய்யப்பட்டது

Slide2‘ஜி25’ எனும் நாடறிந்த மலாய் குழுவினர் வெளியிட்ட ஒரு புத்தகத்தை அரசாங்கம் தடைசெய்துள்ளது. அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இஸ்லாமியம் தொடர்பான பல விவாதக் கட்டுரைகள் அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மௌனத்தை உடைப்போம் : மிதவாதக் குரல்கள் – அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இஸ்லாமியம்’ (Breaking the Silence: Voices of Moderation – Islam in a Constitutional Democracy)  எனும் அப்புத்தகத்தில், அரசியலமைப்பில் இஸ்லாமின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டிருப்பது பொதுமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும் எனும் அடிப்படையில், அப்புத்தகம் தடை செய்யப்பட்டதாக காரணம் கூறப்படுகிறது.

அச்சகம் மற்றும் பதிப்பகச் சட்டம் (விரும்பத்தகாத வெளியீடுகள் கட்டுப்பாடு (எண்12) ஆணை 2017-ன் கீழ், உள்துறை அமைச்சர்   ஸாகிட் ஹமிடி அப்புத்தகத்தைத் தடைசெய்ததாக, மத்திய அட்டர்னி ஜெனரல் அலுவகத்தின் இ-நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்தத் தடையுத்தரவு தனக்கு அதிர்ச்சியளிப்பதாக, ஜி25 அமைப்பின் பேச்சாளர் நூர் ஃபரீடா அரிப்பின் கூறியுள்ளார். இது அரசாங்கத்தின் ‘அடக்குமுறை’ செயல் என தாம் கருதுவதாகவும் தி சன் ஆங்கில நாளேட்டிடம் அவர் கூறியுள்ளார்.

2015-ம் ஆண்டு டிசம்பரில், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட மார்ஷல் கவெண்டிஸ் இண்டர்நேசனல் (ஆசியா) பிரைவெட் லிமிடெட் அப்புத்தகத்தை முதன்முதலாக வெளியீடு செய்தது.

வெளியீட்டாளரின் இணையத்தள விபரங்களின்படி, அப்புத்தகத்தில் மலேசியர்களின் சமூக-அரசியல் பரிமாணம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார, கலாச்சார விளைவுகள் குறித்து பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டாக்டர் ஷாட் சலீம் ஃபாரூக்கி, சந்தரா முஷாப்பர், மலாயாப் பல்கலைக்கழகச் சட்டத்துறை பேராசிரியர் Slide1அஸ்மி ஷாரோம், சிஸ்டர்ஸ் இன் இஸ்லாம் அமைப்பின் முன்னாள் நிர்வாக இயக்குநர் இரத்னா ஒஸ்மான் போன்றோர் உட்பட 22 பேரின் கட்டுரைகள் அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

“நாட்டின் முன்னணி கல்வியாளர்கள், முக்கிய வழக்கறிஞர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்ட இஸ்லாமிய அறிஞர்களின்  கல்வி சார்ந்த கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. எந்தவொரு கட்டுரையும் இஸ்லாத்திற்கு  அநீதியானதாக எனக்குத் தெரியவில்லை,” என நூர் ஃபரீடா அரிப்பின் கூறியுள்ளார்.

“ஆக, தவறான கண்ணோட்டதில் பார்க்காமல், இஸ்லாமிய மதம் பற்றிய ஆக்ககரமான விவாதங்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக அவற்றை எடுத்துகொள்ள வேண்டும்,” என்று அவர் மேலும் கூறியதாக தி சன்  செய்திகள் வெளியிட்டுள்ளது.