ஹார்வஸ்ட் கோர்ட் பங்கு விலை 30% வீழ்ச்சி

ஹார்வஸ்ட் கோர்ட் இண்டஸ்ட்ரீஸ் பெர்ஹாட் பங்குகள் ‘குறிக்கப்பட்ட பங்குகள்’ என புர்சா மலேசியா பங்குச் சந்தை நேற்று பிரகடனம் செய்ததைத் தொடர்ந்து அதன் விலை இன்று காலை 30 விழுக்காடு வீழ்ச்சி கண்டது.

அந்த நிறுவனம் அரசாங்கத்திடமிருந்து சிறப்பு சலுகைகளைப் பெறுகிறது என்பதை அதன் முக்கியப் பங்குதாரரும் பிரதமருடைய இரண்டாவது புதல்வருமான முகமட் நஜிபுடின் மறுத்த போதிலும் அதன் பங்கு விலை சரிந்தது.

இன்று காலை 9 மணிக்கு பங்குச் சந்தையில் பரிவர்த்தனை தொடங்கிய போது ஹார்வஸ்ட் கோர்ட் பங்கு விலை 1 ரிங்கிட் 50 சென்- ஆகவும் அதன் வாரண்ட் விலை 1  ரிங்கிட் 27 சென் -ஆகவும் குறைந்தன. அந்த விலைகளான முறையே நேற்றைய 2 ரிங்கிட் 13 சென், 1.81 சென் -னுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சிக்கு சமமாகும்.

மொத்தம் 1.2 பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனத் திட்டங்களில் அரசாங்கம் சம்பந்தப்படவில்லை என சின் சியூ டெய்லி, சைனா பிர்ஸ் ஆகிய இரண்டு சீன மொழி தினசரிகளுக்கு நஜிபுடின் வழங்கிய பேட்டி  இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நஜிபுடின் தலைவராக இருக்கும் சாஹாஜுத்தா (சபா) சென் பெர்ஹாட், ஹார்வஸ்ட் கோர்ட்-டுக்கு அந்த திட்டங்களை வழங்கியுள்ளது.  சாஹாஜுத்தா கோத்தா கினாபாலுவில் சத்து போர்னியோ பேரங்காடித் தொகுதியைக் கட்டியுள்ளது.

ஹார்வஸ்ட் கோர்ட் பங்கு விலை குறித்த ஊகத்தையும் தம்மைப் பற்றி பரவியுள்ள வதந்திகளையும் பற்றிக் குறிப்பிட்ட நஜிபுடின், தாம் அதனால் “மிகவும் கவலை அடைந்துள்ளதாக” சொன்னார். ஆனால் அந்த நிலைமையச் சீர்படுத்த தம்மால் எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு அக்டோபர் 13ம் தேதி ஹார்வஸ்ட் கோர்ட் பங்கு விலை எட்டு சென் -ஆக இருந்தது. அது கிட்டத்தட்ட 2,563 விழுக்காடு வரை ஏற்றம் கண்டது.

புர்சா மலேசியா பங்குச் சந்தை ஹார்வஸ்ட் கோர்ட் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ‘குறிக்கப்பட்ட பங்குகள்’ என நேற்று அறிவித்தது. அதன் பரிவர்த்தனையையும் ஒரு நாளைக்கு அது நிறுத்தி வைத்தது. புர்சா மலேசியா பங்குச் சந்தையில் அதன் பங்குகள் பரிவர்த்தனை மிக அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“குறிக்கப்பட்ட பங்குகள்’ என அறிவிக்கப்பட்டால் அந்தப் பங்குகளைக் கொள்முதல் செய்வதற்கு முன்கூட்டியே ரொக்கம் செலுத்த வேண்டும். அவற்றை விற்பதற்கு முன்னர் எந்தப் பாக்கியும் இருக்கக் கூடாது. அந்தப் பங்குகள் ஊக வாணிகம் மித மிஞ்சிப் போவதைத் தடுப்பதே அந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.”