எதிரணி அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றியடைவது சாத்தியமில்லை என்பதை சீனர்கள் தெரிந்துகொள்ள வேண்டும், நஜிப் கூறுகிறார்

 

Najibchineseஎதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் புத்ரா ஜெயாவை கைப்பற்றுவதற்கான வாய்ப்பே இல்லை என்பதை சீனச் சமூகம் தெரிந்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் நஜிப் கூறினார்.

இன்றைய அரசியல் நிலவரப்படி, மலாய்க்காரர்களுக்கு இரண்டு அரசியல் கட்சிகள் மட்டுமே இருக்கின்றன – அம்னோ மற்றும் பாஸ். பக்கத்தான் ஹரப்பானை மலாய்க்காரர்கள் ஆதரிக்கவில்லை. டிஎபி அடுத்த அரசாங்கத்தை அமைப்பது பற்றி கனவுகூட காணமுடியாது என்று நஜிப் மேலும் கூறினார்.

ஆண்டவன் அருளால், அடுத்த அரசாங்கம் தொடர்ந்து பிஎன்னுடையதாக இருக்கும் என்று புத்ரா உலக வாணிப மையத்தில் இன்று நடைபெற்ற “மலேசியச் சீனர்கள் தேசப்பற்று பேரணி” நிகழ்ச்சியில் உரையாற்றிய நஜிப் கூறினார்.

மலேசிய தினத்தை முன்னிட்டு மசீச ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் சுமார் 15,000 பேர் நாடுதழுவிய அளவிலிருந்து, சாபா மற்றும் சரவாக் உட்பட, வந்து பங்கேற்றனர்.

மக்களை நம்பவைக்க முடியவில்லை என்றால், அவர்களை குழப்பமடையச் செய்வது எதிரணியின் மந்திரம் என்று நஜிப் தெரிவித்தார்.

எதிரணியின் பிரச்சாரத்தை நம்பிவிட வேண்டாம் என்று அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.