ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் எம்ஏசிசி அஸ்வானை விசாரிக்கும்

தொலைக்காட்சி   பிரபலம்   அஸ்வான்   அலி,  தன்   குடும்பத்தைச்   சேர்ந்த   ஒருவர்   ஊழலில்   ஈடுபட்டுள்ளார்    என்று   கூறியிருப்பதன்    தொடர்பில்  எம்ஏசிசி   நாளை   அவரிடம்   வாக்குமூலம்   பதிவு    செய்யும்.

அச்சந்திப்பு   நாளைக்  காலை  10.30க்கு   புத்ரா   ஜெயாவில்   எம்ஏசிசி   தலைமையகத்தில்    நடைபெறும்    என  மலேசியாகினிக்குத்    தெரியவந்துள்ளது.

சிலாங்கூர்   மந்திரி  புசார்   அஸ்மின்   அலியைக்  கடுமையாகக்   குறைகூறி  வருபவர்    அஸ்வான்.  இவ்வளவுக்கும்   அஸ்மின்   அவரின்   அண்ணன்.

அண்மையில்  நடந்த  அம்னோ   பொதுப்பேரவைக்   கூட்டத்துக்குச்   சென்ற  அஸ்வான்,  சிலாங்கூரை   அம்னோ   கைப்பற்றுவதற்கு   உதவும்   “ஒரு   மில்லியன்  ஐடியாக்கள்”   கைவசம்  இருப்பதாகக்   கூறிக்கொண்டார்.

அஸ்மினின்  “இரகசியங்களை”   அம்பலப்படுத்தி   அவரை    ஒழித்துக்கட்டப்போவதாகவும்   சொன்னார்.

அதன்  பின்னர்  பிரதமர்துறை   துணை   அமைச்சர்   ரசாலி  இப்ராகிமைச்    சந்திக்க   விருப்பம்   தெரிவித்தார்.  ரசாலி   எம்ஏசிசி  விவகாரங்களைக்  கவனித்துக்கொள்கிறார்.

அவ்விருவரும்  நேற்று  இரண்டு  மணி  நேரம்   சந்தித்துப்   பேசியதாக     மலேசியா  கெசட்    கூறியது.