செய்தி: சீன நிறுவனங்கள் 1எம்டிபிக்கு உதவின

1எம்டிபி  சொத்துக்களை   சீன   நாட்டு  நிறுவனங்களுக்கு  விற்றதன்வழி  கிடைக்கப்பெற்ற  பணத்தைக்  கொண்டு    அபு  டாபி   அனைத்துலக   பெட்ரோலிய   முதலீட்டு   நிறுவன(ஐபிஐசி)த்துக்கு   ஆண்டு  இறுதிக்குள்  கொடுக்கப்பட   வேண்டிய  யுஎஸ்$602.7 மில்லியன்  கடன்  கட்டி  முடிக்கப்பட்டதாக   சிங்கப்பூர்  ஸ்ரேய்ட்ஸ்   டைம்ஸ்   கூறியது.

1எம்டிபி  பினாங்கின்   வட   பகுதியிலும்    போர்ட்  கிள்ளானிலும்  அதற்குச்   சொந்தமான   இரண்டு  நிலங்களை   விற்றதாக   பல   வட்டாரங்களிருந்து   தகவல்  கிடைத்திருப்பதாக   அச்செய்தி   கூறிற்று.

“மலேசிய     அரசாங்க     அதிகாரிகள்   சொத்து  வாங்கியவர்களை   அடையாளம்   காண்பிக்க   மறுத்தனர்   ஆனால்,   நிலவரங்களை   நன்கு    அறிந்த    நிதியியல்   அதிகாரி  ஒருவர்  1எம்டிபி  சொத்துக்களை  வாங்கியவை    ‘சீன  அரசுக்குச்  சொந்தமான  நிறுவனங்கள்தான்’   என்றார்.

“அதற்குமேல்  விவரிக்க   அவர்  விரும்பவில்லை”,  என   அச்செய்தி  கூறியது.

குறிப்பிட்ட   அவ்விரண்டு  நிலங்களையும்   விரிவாக   மேம்படுத்த   1எம்டிபி  திட்டமிட்டிருந்தது.  ஆனால்,  அதற்குப்  பணச்  சிக்கல்  ஏற்பட்டதை   அடுத்து   அத்  திட்டங்கள்  கைவிடப்பட்டன.

1எம்டிபி-இல்  சீன  நிறுவனங்கள்  அக்கறை  கொள்வதில்   வியப்பில்லைதான்.   ஓராண்டுக்கு  முன்பே   சீனாவும்  மலேசியாவும் 1எம்டிபி  எதிர்நோக்கும்  பணச்சிக்கலிலிருந்து   அதை  மீட்டெடுக்க    பேச்சுகளில்   ஈடுபட்டிருப்பதாக   பினான்சியல்  டைம்ஸ்   செய்தி  வெளியிட்டிருந்தது.