நாடாளுமன்றத்தில் அவசர காலப் பிரகடனங்களை ரத்துச் செய்யும் மசோதா தாக்கல்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மூன்று அவசர காலப் பிரகடனங்களை ரத்துச் செய்வதற்கான பிரேரணையை இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார். 40 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட அந்த மூன்று பிரகடனங்களும் இன்னும் அமலில் இருக்கின்றன.

நீக்கப்படவிருக்கும் அவசர காலப் பிரகடனங்கள் வருமாறு:

1966ம் ஆண்டு சரவாக்கில் ‘அரசியல் வேறுபாட்டை ஒடுக்குவதற்கு’ இயற்றப்பட்ட மாநில அவசர காலப் பிரகடனம்;

1969ம் ஆண்டு மே 13 இனக் கலவரங்களுக்குப் பின்னர் பிரகடனம் செய்யப்பட்ட தேசிய அவசர காலம்;

1977ம் ஆண்டு கிளந்தானில்  ‘அரசியல் வேறுபாட்டை ஒடுக்குவதற்கு’ பிரகடனம் செய்யப்பட்ட மாநில அவசர காலப் பிரகடனம்.

அந்தப் பிரேரணை இன்று காலை கேள்வி நேரத்துக்குப் பின்னர் சமர்பிக்கப்படும் என நேற்றிரவு மக்களவைக் கூட்டத்தின் முடிவில் சபாநாயகர் பண்டிக்கார் அமின் முலியா அறிவித்தார்.

அதற்கு முன்னதாக நேற்றிரவு 2012ம் ஆண்டுக்கான விநியோக மசோதாவை( 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்) மக்களவை ஏற்றுக் கொண்டது.