பொதுக் கூட்ட மசோதாவை எதிர்க்குமாறு பிகேஆர், கெரக்கானைக் கேட்டுக் கொண்டுள்ளது

பிஎன் உறுப்புக் கட்சியான கெரக்கான், தனது கொள்கை அறிக்கையை உண்மையாக பின்பற்றி பொதுக் கூட்ட மசோதாவுக்கு எதிரான நிலையைக் கடைப்பிடிப்பதில் பக்காத்தான் ராக்யாட் சகாக்களுடன் இணைந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பத்து பிகேஆர் எம்பி தியான் சுவா கேட்டுக் கொண்டுள்ளார்.

“கெரக்கான் எபி-க்கள் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு அந்த மசோதாவை எங்களுடன் சேர்ந்து நிராகரிக்க வேண்டும்.’

“பிரச்னைகள் மீது கருத்து வேறுபாடு கொள்ள அதற்குத் துணிச்சல் இருந்தால் பிஎன் -னில் தொடர்ந்து இருக்க அது செய்துள்ள முடிவை நான் மதிப்பேன்,” என தியான் சுவா, ஜோகூர், பூலாயில் பிகேஆர் பேரவை நிறைவுக்கு வந்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

மக்களவையில் கெரக்கானுக்கு இரண்டு எம்பி-க்கள் உள்ளனர். கெரிக் எம்பி தான் லியான் ஹோ, சிம்பாங் ரெங்காம் எம்பி லியாங் தெக் மெங் ஆகியோரே அவர்கள்.

கெரக்கான் கட்சியின் கோட்பாடுகளும் பிகேஆர் கோட்பாடுகளும் ஒரே மாதிரியானவை என்பதால் தாம் அந்த அழைப்பை விடுப்பதாக சுவா குறிப்பிட்டார்.

“கெரக்கான் கொள்கை அறிக்கை பிகேஆர் அறிக்கையைப் போன்றது. அதன் நோக்கமும் ஏறத்தாழ பிகேஆர் கட்சியின் எண்ணத்தைப் போன்றது. ஆனால் அது பிஎன் -னுக்குள் அதனை அடைய முடியாமல் கெரக்கான் தடுமாறுகிறது.”

இரு தரப்பு ஒத்துழைப்பை அந்த எம்பி-க்களும் தலைமைத்துவமும் விரும்பாவிட்டால் அடிநிலை உறுப்பினர்கள் தாங்கள் ஒப்புக் கொள்ளும் விஷயங்கள் மீது பக்காத்தான் ராக்யாட் கட்சிகளுடன் இணைந்து கொள்வதற்கு ஊக்கமூட்டப்படுகின்றனர்.

பிகேஆர்-iல் இணைவதற்கு முன்னாள் சிலாங்கூர் கெரக்கான் இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் டெல்ரென் டெரன்ஸ் டக்ளஸ் சமர்பித்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் சுவா நிருபர்களிடம் பேசினார்.

கெரக்கான் தலைவர் கோ சூ கூன், அம்னோவுக்கு அடிபணியும் போக்கினால் வெறுப்படைந்ததால் டெல்ரென் இன்று காலை குறுந்தகவல் மூலம் கெரக்கானிலிருந்து  விலகிக் கொள்ளும் முடிவை அந்தக் கட்சியின் தலமைத்துவத்திற்குத் தெரிவித்துள்ளார்.

டெல்ரென், பிகேஆர் சுங்கை பட்டாணி கிளையில் சேர்ந்துள்ளார்.