துணை எம்பி: சுல்தான் முகம்மட் V பதவி விலகுகிறார் என்பது வதந்தி, நம்பாதீர்கள்

மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் முகம்மட் V விரைவில் பதவி விலகுவார் என்று கூறும் வதந்திகள் சமூக உடகங்களில் பரவலாகி வருகின்றன.

அது குறித்து கிளந்தான் துணை மந்திரி புசார் முகம்மட் அமார் நிக் அப்துல்லாவிடம் கேட்டதற்கு மாநில அரசு அதன் தொடர்பில் எந்தத் தகவலையும் பெறவில்லை என்றார்.

“மாநில அரசுக்கு எதுவும் தெரியாது. அது ஒரு வதந்தி என்றால் அதை நம்பாதீர்கள்.

“இதில் ஆச்சரிப்பட எதுவும் இல்லை. வதந்திகளில், பேரரசரைப் பற்றி மட்டுமல்ல, அரசாங்கத்தைப் பற்றியும் என்னென்னவோ சொல்கிறார்கள். அதனால் வதந்திகளை நம்பாதீர்கள்”, என்று முகம்மட் அமார் இன்று கோத்தா பாருவில் கூறினார்.

தற்போது விடுப்பில் உள்ள கிளந்தான் ஆட்சியாளரான ஐந்தாம் முகம்மட் 2017, ஏப்ரல் 24-இல் நாட்டின் 15வது யாங் டி பெர்துவான் ஆகோங்-ஆக அரியணை அமர்ந்தார்.

அவர் விடுப்பில் உள்ள காலத்தில் பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா பேரரசர் பணிகளைக் கவனித்துக் கொள்கிறார்.

இதற்கு முன்னர், ஐந்தாம் சுல்தான் முகம்மட் ,49, ரஷ்ய அழகி ஒக்சானா வேவொடினாவை நவம்பர் 22-இல் மாஸ்கோவில் திருமணம் செய்து கொண்டதாக ஒரு வதந்தி.

அது குறித்து பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டிடம் வினவியதற்குத் தமக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார்.

“அதை உறுதிப்படுத்தும் தகவல் எதுவும் என்னிடம் இல்லை. எனவே அது பற்றி எதுவும் கூற இயலாது”, என்றாரவர்.