டாக்டர் எம்: அம்னோ கேமரனில் வென்றது ஆச்சரியமான ஒன்றில்லை

கடந்த சனிக்கிழமை, கேமரன் மலையில் இடைத்தேர்தல் முடிவு அதிர்ச்சியளிக்கும் ஒன்றல்ல என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் தெரிவித்துள்ளார்.

அம்னோ எப்போதும் கிராமப்புறங்களில் வலுவாக இருக்கும் என்று அவர் கூறினார்.

“அதுமட்டுமின்றி, துரதிருஷ்டவசமாக அவர்கள் இனப் பிரச்சனைகளைக் கையாளுகின்றனர்,” எனப் பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த இடைத் தேர்தலோடு, 5-வது முறையாக, பிஎன் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைத்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று புத்ரா ஜெயாவில், ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மகாதிர், கடந்த பொதுத் தேர்தலில் அம்னோ அதிக இடங்களை வென்றது என்று சொன்னார்.

ஆனால், அரசாங்கத்தைத் தக்கவைத்து கொள்ள, அவர்களுக்குப் போதிய பலம் இல்லாமல் போயிற்று என்றும் அவர் தெரிவித்தார்.

“இது மக்களுடைய விருப்பத்திற்கு இணங்கிய ஒரு முடிவு,” என்ற அவர், அந்த முடிவை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.