ஃபைசால் : பேராக் டிஏபி தலைவர்களுடன் எந்தப் பிரச்சனையும் இல்லை

சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுவதுபோல், மாநில டிஏபி தலைவர்களுடன் தனக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை எனப் பேராக் மந்திரி பெசார் அஹ்மட் ஃபைசால் அஜுமு இன்று தெரிவித்தார்.

டிஏபி தலைவர்கள், அக்கட்சியின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், அதிகாரப்பூர்வ விழாவிற்கும் தனது வருகையை மகிழ்ச்சியாகவே எதிர்கொள்கின்றனர் என்றார் அவர்.

“அது ஒரு வதந்தி, ஒரு குறிப்பிட்ட தரப்பினர், மீண்டும் இதுபோன்ற ஒரு பிரச்சனையை எழுப்ப முயல்கின்றனர்.

ஆனால், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில், எனக்கும் கூட்டணியின் மற்ற நண்பர்களுக்குமான உறவு, எந்தவொரு சிக்கலும் இல்லாமல், சிறப்பாகவே இருக்கிறது,” என்று இன்று பேராக், செமோர் பட்டணத்தில், சீனப் புத்தாண்டை முன்னிட்டு மெண்டரின் பழங்களை வழங்கியப் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

-பெர்னாமா