அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அம்னோவும் பாஸும் ஆயத்தம்

அம்னோவும் பாஸும் வளர்ந்து வரும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்திக்கொள்ள அடுத்த செவ்வாய்க்கிழமை கூடிப் பேசும்.

பேச்சுகளில் கலந்துகொள்ளும் அம்னோ குழுவுக்கு அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான் தலைமை தாங்குவார். பாஸ் குழுவுக்கு அதன் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் தலைமை தாங்குவார்.

“மார்ச் 5 செவ்வாய்க்கிழமை அம்னோ, பாஸ் குழுக்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்திக் கொள்வது பற்றி பேச்சு நடத்தும்.

“அதன் பின் மாநில அளவில் பேச்சுகள் நடத்துவோம்”, என அம்னோ தலைவர் மாட் ஹசான் நேற்றிரவு செமிஞ்யேயில் கூறினார்.

இரு கட்சிகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்ள முனைவது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்குக் குறிப்பாக டிஏபிக்கு அச்சத்தைக் கொடுத்திருக்கும் என்றாவர்.

14வது பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அம்னோவும் பாஸும் அணுக்கமாக ஒத்துழைக்கத் தொடங்கியுள்ளன.

இனி வரும் தேர்தல்களில் ஒன்றை எதிர்த்து மற்றொன்று போட்டியிடுவதில்லை என்ற முடிவில் அவை உறுதியாக உள்ளன.