எம்.பி. : பிஎன் நிர்வாகத்தின் பதிவுகளை ஏன் இரகசியமாக வைக்க வேண்டும்?

அரசாங்க ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கையை (சிஇபி) வெளிப்படையாக விவாதிக்க, நாடாளுமன்றத்தில் அதனை முன்வைக்க வேண்டுமென பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் காரிம், பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டைக் கேட்டுக்கொண்டார்.

அந்த அறிக்கையை மறைக்க வேண்டியதன் அவசியம் என்னவென்று கேள்வி எழுப்பிய அவர், பிஎன் நிர்வாகத்தை விட, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் வெளிப்படையாக இருப்பதைப் பார்க்க விரும்பும் மக்களுக்கு இது ஏமாற்றத்தை அளிக்கும் எனக் கூறினார்.

“கடந்த மே 9, 2018-ல், புதிய அரசாங்கத்தை அமைத்த போது, பிரதமர் சிஇபி-ஐ உருவாக்கியது மக்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவிட்டது.

“பிஎன் அரசாங்கத்தின் நிர்வாகப் பதிவுகளை மக்களின் பார்வையிலிருந்து இரகசியமாக்க வேண்டியதன் அவசியம் என்ன?” என்று இன்று ஓர் அறிக்கையில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று, பிரதமர் துறை இலாகாவின் துணையமைச்சர் ஹனீபா மைடின், சிஇபி அறிக்கை, இரகசியத் தகவலைப் பாதுகாக்கும், அதிகாரப்பூர்வ இரகசியங்கள் சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“அந்த அறிக்கை பிரதமரின் பார்வைக்கு மட்டுமே வழங்கப்படும், பொது மக்களுக்கு திறந்துவிடும் நோக்கம் இல்லை,” என அவர் நாடாளுமன்றத்தில், ஈப்போ தீமோர் எம்பி, வோங் கா வோ-இன் கேள்விக்குப் பதில் அளிக்கையில் கூறினார்.

பிகேஆர் ஜொகூர் மாநிலத் தலைவருமான ஹசான், ஹனிபாவின் பதிலில் தான் மிகவும் ஏமாற்றமடைந்ததாகக் கூறினார்.

மேலும், தற்போதைய நாடாளுமன்ற அமர்வில் மகாதிர் அந்த அறிக்கையை வழங்குவார் என எதிர்பார்ப்பதாகவும் சொன்னார்.

“பிரதமர் நாடாளுமன்றத்திற்குப் பொறுப்பானவர், நாடாளுமன்றம் மக்களுக்குப் பொறுப்பானது என்பதை நான் பணிவுடனும் மரியாதையுடனும் நினைவு கூர்கிறேன்.

“இது சர்வாதிகார ஆட்சி அல்ல, சுயநலக்குழு ஆட்சிமுறையிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும் ஜனநாயக அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக இதுவும் உள்ளது,” என்று அவர் கூறினார்.

முன்னாள் நிதியமைச்சர் டாயிம் ஜைனுடின் தலைமையில், கடந்த மே 12, 2018-ல் சிஇபி அமைக்கப்பட்டது.

கூட்டம் 200 க்கும் மேற்பட்ட பல ஒழுங்குமுறை அமைப்புகளிலிருந்து 350 க்கும் மேற்பட்ட தனிநபர்களைக் கொண்டது, அவை களின் அறிக்கையை உருவாக்குவதற்காக.

அக்குழு, 200-க்கும் மேற்பட்ட பலதுறை சார்ந்த அமைப்புகளிலிருந்து, 350-க்கும் மேற்பட்ட தனிநபர்களைச் சந்தித்து, பொருளாதாரம் மற்றும் நிதிக் கொள்கைகள் சம்பந்தமாக அறிக்கை தயாரித்தது.

ஆகஸ்ட் 20-ம் தேதி, பிஎச் அரசாங்கத்தின் 100-வது நாளில், சிஇபி தனது பணிகளை முடித்துவிட்டதாகவும் மகாதிரிடம் அவ்வறிக்கையைச் சமர்பிக்கவுள்ளதாகவும் டாயிம் அறிவித்தார்.

எனினும், சிஇபி அறிக்கை பொதுமக்களுக்கு அறிவிக்கப்படாது என்றும், அந்த ஆலோசனைக் குழு தன்னிடம் மட்டுமே அறிவிக்கும் என்றும், கடந்தாண்டு டாக்டர் மகாதிர் தெரிவித்தார்.