பிரிட்டன் ஈரான் மோதல் முற்றுகிறது!

பிரிட்டனில் இருக்கும் ஈரானின் தூதரகம் மூடப்பட வேண்டும் என்றும் அதில் பணிபுரியும் பணியாளர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்றும் பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஈரானில் உள்ள பிரிட்டன் தூதரகத்துக்குள் எதிர்ப்பாளர்கள் புகுந்து தாக்கிய சம்பவம் நடைபெற்று ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கையை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் அறிவித்துள்ளார்.

இது போன்ற தாக்குதல்கள் ஈரான் அரசின் அனுசரணை சற்றும் இல்லாமல் நடந்திருக்க முடியாது என்று ஹேக் குறிப்பிட்டார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை தாம் மூடிவிட்டதாகவும் அங்கிருக்கும் ஊழியர்கள் தற்போது அங்கிருந்து வெளியேற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜாங்க உறவுகள் மிக மிக கீழ் மட்டத்தில் இருப்பதாகவும் வெளியுறவுச் செயலர் தெரிவித்தார்.