இராமசாமி புக்கிட் அமானுக்கு விளக்கமளித்தார்

பினாங்கு இரண்டாவது துணை முதல்வர் பி.இராமசாமி இன்று புக்கிட் அமான் சென்று கடந்த மாதம் அவர் இணைய செய்தித் தளமொன்றில் எழுதிய கட்டுரைமீது செய்யப்பட்ட போலீஸ் புகார் தொடர்பில் விளக்கம் அளித்தார்.

இராமசாமி காலை மணி 9.50க்கு புக்கிட் அமான் சென்றார்.

“இணையச் செய்தித்தளத்தில் பதிவிடப்பட்ட ஒரு கட்டுரை தொடர்பில் விளக்கம் அளிப்பதற்காக புக்கிட் அமான் வந்தேன்..

“போலீசுக்கு விளக்கமளித்தேன். இந்த விவகாரம் இன்றுடன் முடிந்ததாகவே கருதுகிறேன்”, என்றவர் புக்கிட் அமானில் அவரைச் சந்தித்த செய்தியாளர்களிடம் கூறினார்.

அக்டோபர் 17-இல் பெர்னாமா செய்தி ஒன்று www.malaysiagazette.com-இல் ‘அரசாங்கம் மாறிவிட்டது ஆனால் போலீஸ் மாறவில்லை’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை தொடர்பாக விளக்கம் கேட்பதற்கு இராமசாமியை புக்கிட் அமான் அழைத்திருப்பதாகக் கூறியது.

அக்கட்டுரையில் இராமசாமி, செப்டம்பர் 14-இல், சிலாங்கூர் புக்கிட் அராங்கில் கொள்ளையர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் மூன்று ஆடவர்களைச் சுட்டுக்கொன்ற சம்பவம் ப்ற்றிக் கருத்துரைத்திருந்தார்.

-பெர்னாமா