அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பின் ஜி-7 மாநாடு: டிரம்ப் பரிசீலனை

டிரம்ப்

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜி-7 மாநாட்டை நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் : உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பாக ஜி-7 நாடுகள் அமைப்பு உள்ளது. இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு நடக்க உள்ள ஜி-7 மாநாட்டை அமெரிக்கா நடத்த உள்ளது.

ஜூன் மாதமே நடக்க வேண்டிய இந்த மாநாடு கொரோனா தொற்று காரணமாக செப்டம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜி-7 நாடுகளில் இந்தியா, ரஷியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைக்கப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி வருகிறார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜி-7 மாநாட்டை நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இது,குறித்து அவர் கூறுகையில் “தேர்தலுக்குப் பிறகு ஜி-7 மாநாட்டை நடத்த நான் மிகவும் விரும்புகிறேன். மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதினுக்கு நான் நிச்சயம் அழைப்பு விடுப்பேன். ரஷியாவை ஒரு முக்கிய காரணியாக நான் நினைக்கிறேன்” என கூறினார்.

malaimalar