கோவிட் 19 : இன்று 1,212 புதியத் தொற்றுகள், 3 இறப்புகள்

நாட்டில், இன்று மதியம் நிலவரப்படி 1,212 புதிய கோவிட் -19 பாதிப்புகள் மற்றும் 3 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிக எண்ணிக்கையிலான புதிய தொற்றுகள் (43 %) பதிவாகியுள்ளன, அடுத்த நிலையில் சபா மாநிலம் (26.9 %) உள்ளது.

இன்று, சபாவில் 2 மரணங்களும், கெடாவில் 1 மரணமும் பதிவாகியுள்ளன. இறந்தவர்களில் 22 வயது இளைஞர் ஒருவரும் அடங்குவார். ஆக, நாட்டில் இதுவரை கோவிட் -19 காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 360-ஆக உயர்ந்துள்ளது.

அவசரப் பிரிவில் 113 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 42 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

திரெங்கானு, மலாக்கா மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

சிலாங்கூரில் 402 தொற்றுகளும் சபாவில் 326 தொற்றுகளும் புதியாகப் பதிவாகியுள்ளன.

சிலாங்கூர் மற்றும் சபாவை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

நெகிரி செம்பிலானில் 141, கோலாலம்பூரில் 119, பினாங்கில் 60, ஜொகூரில் 54, பேராக்கில் 43, கெடாவில் 31, லாபுவானில் 30, சரவாக் மற்றும் பஹாங்கில் தலா 2, புத்ராஜெயா மற்றும் கிளந்தானில் தலா 1.

மேலும் இன்று, 3 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-

ஜாலான் லாப்பான் திரளை – சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம் மற்றும் கோலாலம்பூர், செராஸ், கெப்போங், தித்திவங்சா & லெம்பா பந்தாய் மாவட்டங்கள்; பத்து செம்பிலான் திரளை – சிலாங்கூர், கோலா லங்காட், கிள்ளான், பெட்டாலிங் & கோல சிலாங்கூர் மாவட்டங்கள்; நிபோங் திரளை – ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம்.