கோவிட் 19 : இன்று 2,985 புதிய நேர்வுகள், ஐ.சி.யு.-வில் 197 பேர், 4 மரணங்கள்

நாட்டில் இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, 2,985 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 4 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மேலும், 994 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் (ஐ.சி.யு.) 197 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 79 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

லாபுவானில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகாத நிலையில், சிலாங்கூர் 837 புதியத் தொற்றுகளுடன் (28 விழுக்காடு) ஆக மோசமான பதிவைக் கொண்டுள்ளது. அதனையடுத்து, ஜொகூர் 535 புதிய தொற்றுகளையும் (17.9 விழுக்காடு), சபா 450 (15.1 விழுக்காடு) தொற்றுகளையும் பதிவு செய்துள்ளன.

மற்ற மாநிலங்களில் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- கோலாலம்பூர் (289), சரவாக் (166), பஹாங் (143), நெகிரி செம்பிலான் (106), பினாங்கு (105), கெடா (97), கிளந்தான் (85), மலாக்கா (72), பேராக் (61), திரெங்கானு (27), புத்ராஜெயா (11), பெர்லிஸ் (1).

இன்று, சபாவில் மூவர், ஜொகூரில் ஒருவர் என நால்வர் இத்தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். இறந்தவர்களில் ஒருவர் வெளிநாட்டினர். ஆக, இதுவரை நாட்டில் 563 பேர் இந்நோயின் காரணமாக மரணமடைந்துள்ளனர்.

மேலும் இன்று 11 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன :-

ஜொகூர் (3) – ஜாலான் ராமி பணியிடத்திரளை (மூவார்), கோத்தா திரளை (கோத்தா திங்கி), தஞ்ஜோங் மெகா பணியிடத் திரளை (பொந்தியான்); கோலாலம்பூர் (2) – ஜாலான் கஸ்தூரி பணியிடத்திரளை (லெம்பா பந்தாய், கெப்போங்), ஜாலான் தம்பி திரளை (லெம்பா பந்தாய்); சிலாங்கூர் (2) – தாமான் இந்தெகிரிட்டி பணியிடத்திரளை (கோம்பாக்), இஜோக் பணியிடத்திரளை (பெட்டாலிங், கோல லங்காட், செப்பாங், கிள்ளான், உலு லங்காட்); கிளந்தான் (1) – புக்கிட் பாகார் திரளை (மாச்சாங்); கெடா (1) – தாமான் பாத்தேக் திரளை (பாலிங், கோல மூடா); மலாக்கா (1) – டியாலிசிஸ் மாலிம் திரளை (அலோர் காஜா, மலாக்கா தெங்கா); நெகிரி செம்பிலான் (1) – கம்போங் தெங்கா திரளை (சிரம்பான்).