பஞ்சத்தின் விளிம்பில் சோமாலியா – ‘உயிர்களைக் காப்பாற்ற நேரம் போதவில்லை’

வறட்சியால் வாடும் சோமாலியா (Somalia) பஞ்சத்தின் விளிம்பில் உள்ளது என்று ஐக்கிய நாட்டுக்கான மனிதாபிமானப் பிரிவுத் தலைவர் கூறியிருக்கிறார்.

10ஆண்டுகளில் இவ்வாறு நேர்வது இது இரண்டாவது முறை.

அக்டோபருக்கும் டிசம்பருக்கும் இடையே நாட்டின் பல பகுதிகளில் மக்கள் பட்டினியால் வாடுவதாக அமைப்பு தெரிவித்தது.சோமாலியாவில் உயிர்களைக் காப்பாற்ற நேரம் போதவில்லை என்று அது குறிப்பிட்டது.

Horn of Africa பகுதியில் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமான வறட்சி ஏற்பட்டிருக்கிறது.தொடர்ந்து 4 பருவங்களாக அங்கு மழை பெய்யவில்லை.

எதிர்வரும் 5ஆவது பருவத்திலும் மழை பெய்யாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதனால் 22 மில்லியன் பேர் உணவின்றித் தவிக்கக்கூடும்.

2011 ஆம் ஆண்டில் சோமாலியாவில் ஏற்பட்ட வறட்சியை விட தற்போதைய நிலைமை இன்னும் மோசமானது என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறுகிறது.

அப்போது 260,000 பேர் பட்டினியால் மாண்டனர். அவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் 6 வயதுக்குட்பட்ட பிள்ளைகள்.அனைத்துலகக் கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட நிதி முடியும் நிலையில் உள்ளதாகச் சோமாலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

-smc