கீர் தோயோவுக்கு 12 மாத சிறைத்தண்டனை

சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி புசார் முகமட் கீர் தோயோவுக்கு எதிராக கடந்த ஓர் ஆண்டுகளுக்கு மேலாக நடந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், அவர் குற்றவாளி என்று ஷா அலாம் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட கீர் தோயோவுக்கு நீதிமன்றம் 12 மாத சிறைத்தண்டனை அளித்தது. அத்தண்டனை இன்றிலிருந்து அமலுக்கு வருகிறது.

மேலும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்தைப் பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தண்டனையை அறிவித்த நீதிபதி, பொது மற்றும் தனியார் நலன்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் பொதுநலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதால் கடுமையான தண்டனை தேவைப்படுகிறது என்று கூறினார்.

இந்த வழக்கில் முறையான தண்டனை சிறைத்தண்டனையாகும் என்று அவர் கூறினார்.

தலைமை அதிகாரி என்ற முறையில் கீர் முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், அரசு தரப்பிடமிருந்து எதிர்ப்பு இல்லாததால், தண்டனை நிறைவேற்றத்தைத் தள்ளிவைக்க அவர் அனுமதி வழங்கினார்.