உக்ரைனில் தாக்குதல் நடத்தச் சென்ற ரஷ்யாவின் சுகோய் போர் விமானம் சொந்த நாட்டின் நகருக்குள் குண்டு வீசியது

உக்ரைனில் தாக்குதல் நடத்துவதற்காக சென்ற ரஷ்யாவின் சுகோய் 34 ரக போர் விமானம், தவறுதலாக ரஷ்ய பகுதிக்குள் குண்டை வீசியது. இந்த குண்டு அதிர்ஷ்டவசமாக நடுரோட்டில் விழுந்து வெடித்ததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

உக்ரைன் பகுதிக்குள் ரஷ்யா ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் பகுதிக்குள் தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்ய விமானப்படையின் சுகோய் 34 ரக போர் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது.

உக்ரைன் எல்லையில் நுழைவதற்கு 40 கி.மீ முன்பாகவே, இந்த விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட 500 கிலோ எடையுள்ள எப்ஏபி-500 எம்62 ரக குண்டு எதிர்பாராதவிதமாக வீசப்பட்டது. இந்த குண்டு ரஷ்யாவின் பெல்கோராட் நகரில் நடுரோட்டில் விழுந்து பயங்கரமாக வெடித்தது. இதில் தரையில் 20 மீட்டர் ஆழத்துக்கு பெரும் பள்ளம் ஏற்பட்டது. இதில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன.

3 பேர் காயம் அடைந்தனர். குண்டு வெடித்த அதிர்வில் ரோட்டில் நின்ற கார் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மேற்கூரையில் கவிழ்ந்து கிடந்தது. உக்ரைனில் துல்லியமான இலக்குகளை தாக்குவதற்கு இந்த ரக குண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 

 

-th