நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய் – அன்வார் சவால்

எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டேவான் கூட்டத்தொடரில் தனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருமாறு எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் சவால் விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் சட்டத்தை பின்பற்ற வேண்டும், வெறும் உணர்வுகளை தூண்டவோ  அல்லது தனது பிரதமர் பதவியில் இருந்து “வெளியேறு” என்று கூச்சலிடவோ கூடாது என்றார்.

“அன்வாரை (பிரதமர் பதவியில் இருந்து) விலக 30 பேர் கத்துகிறார்கள் … அவர்கள் என்ன நினைக்கிறார்கள், இந்த நாட்டில் விதிகள் இல்லை, சட்டம் இல்லை, அமைப்பு இல்லை என்றா?” ?

“ஒருவரை பதவி விலக வலியுறுத்த, இந்த அக்டோபரில் டேவான் ராக்யாட் அமர்வில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்யுங்கள்… பிரேரணை தாமதமாக வந்தாலும், நான் அதை ஆமோதிப்பேன்,” என்று நேற்றிரவு கோலாலம்பூரில் கெஅடிலான் கூட்டத்தில் அன்வார் கூறினார்.

“சீர்திருத்தத்திலிருந்து மலேசியா மதானி வரை” என்ற கருப்பொருளில், புக்கிட் ஜலீலில் உள்ள ஆக்சியாட்டா அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், பிரதமரின் மனைவி டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், பிகேஆர் பொதுச்செயலாளர் புசியா சாலே, பிகேஆர் தகவல் தலைவர் பஹ்மி பட்சில் மற்றும் கிட்டத்தட்ட 10,000 பேர் கலந்து கொண்டனர்.