இருவர் மீது மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மாணவர் குழு MACCயிடம் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் நடந்த ஊழல் வழக்கில் இரண்டு நபர்கள்மீது விரைவில் குற்றம் சாட்டப்படும் என்ற கருத்துக்காக, மலேசியா சபா பல்கலைக்கழக (Universiti Malaysia Sabah) மாணவர் குழு, எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கியை கடுமையாகச் சாடியுள்ளது.

இவ்வளவு காலம் தடயவியல் தணிக்கை நடத்திய பிறகு, ஏன் இருவருக்கு மட்டும் தான் குற்றச்சாட்டு விதிக்கப்படுகிறது?

“சட்டப்படி, சம்பந்தப்பட்ட அனைவரையும் நீதிமன்றத்திற்கு இழுக்க வேண்டும்,” என்று சுவாரா மகாசிஸ்வா(Suara Mahasiswa) யுஎம்எஸ் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்று முன்னதாக, சபா ஊழல் தொடர்பாகக் குறைந்தது இரண்டு நபர்கள்மீது விரைவில் குற்றம் சாட்டப்படும் என்று அசாம் கூறினார்.

“வழக்கில் உள்ள நபர்கள்மீதான குற்றச்சாட்டை மிகக் குறுகிய காலத்தில் அறிவிப்பேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

மற்ற நபர்கள்மீது மேலும் வழக்குத் தொடரப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அசாம் சூசகமாகக் கூறினார்.

எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி

அந்த வகையில், நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட எவரையும், அவர்களின் விசாரணைகளின் முடிவு வரும் வரை அவர்களின் வேலைகளிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று சுவாரா மகாசிஸ்வா யுஎம்எஸ் கூறியது.

“ஜூன் 21 முதல் 22 வரை கோத்தா கினபாலுவில் நடைபெறவிருக்கும் பேரணியில் இந்தக் கோரிக்கையை நாங்கள் வலியுறுத்துவோம்,” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஜூன் 6 அன்று, சபா மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை குற்றஞ்சாட்டும் காணொளிகுறித்த தனது விசாரணைக் கட்டுரையை MACC நிறைவு செய்துள்ளதாக அசாம் உறுதிப்படுத்தினார்.

இந்த அறிக்கை இரண்டு வாரங்களுக்கு முன்னர் அட்டர்னி ஜெனரலின் அலுவலகத்திற்கு மதிப்பாய்வுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது.

மார்ச் 11 அன்று ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட 10 வீடியோ கிளிப்களில் தடயவியல் பகுப்பாய்வு உறுதி செய்யப்பட்டு வருவதாக ஏப்ரல் 29 அன்று அசாம் கூறினார்.