லாரி லஞ்ச ஊழல் விசாரணை: 8 ஜேபிஜே அதிகாரிகள் மற்றும் போலீசார் உட்பட 18 பேர் கைது

லாரி உரிமையாளர்களைப் பாதுகாப்பதற்காக லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் கும்பல் குறித்த விசாரணையில், சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) அதிகாரிகள் மற்றும் போலீசார் என எட்டு பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) கைது செய்துள்ளது.

நிறுவனங்கள் தரப்பிலிருந்து இடைத்தரகர்களுக்கும் அமலாக்க அதிகாரிகளுக்கும் லஞ்சமாக சுமார் 12.4 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்தார்.

“நான்கு ஜேபிஜே (JPJ) அதிகாரிகள், நான்கு போக்குவரத்து போலீசார், இரண்டு நிறுவன உரிமையாளர்கள், ஏழு இடைத்தரகர்கள் மற்றும் போலி கணக்காகப் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கிற்குச் சொந்தமான ஒரு பொதுமகன் என மொத்தம் 18 பேரை ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது,” என்று அவர் கூறினார்.

“ஒவ்வொரு சந்தேகநபர் குறித்தும் தனித்தனியாக விசாரணை அறிக்கைகளைத் தொடங்கியுள்ளோம்,” என்று இன்று இங்குள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அசாம் தெரிவித்தார்.

இதுவரை நான்கு சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், விசாரணைக்கு உதவும் வகையில் மேலும் பலர் அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

சுமார் 4.69 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 59 தனிநபர் மற்றும் 19 நிறுவன வங்கிக் கணக்குகளையும் ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) முடக்கியுள்ளது.

இந்தக் கும்பலால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல்வேறு வெளிநாட்டு நாணயங்கள் உள்ளிட்ட ரொக்கப் பணத்தையும், சொகுசு வாகனங்களையும் ஊழல் தடுப்பு ஆணையம் பறிமுதல் செய்துள்ளதாக அசாம் தெரிவித்தார்.

வங்கிக் கணக்குகள் உட்பட பறிமுதல் செய்யப்பட்ட மொத்த சொத்துக்களின் மதிப்பு 7.6 மில்லியன் ரிங்கிட் ஆகும்.

-fmt