பயங்கரவாத கொள்கை தொடர்பான விசாரணையை நிறைவு செய்ய போலீசாருக்கு கூடுதல் கால அவகாசம் தேவை

ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் சித்தாந்தம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி அண்மையில் கைது செய்யப்பட்ட மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு உள்ளூர் ஆண்களின் வழக்கை விசாரிக்க காவல்துறைக்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது.

இது குறித்து உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில் கூறுகையில், “இந்தக் கைது நடவடிக்கையில் 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தை (Sosma) பயன்படுத்தக்கூடாது என்று சில தரப்பினர் வலியுறுத்தி வந்தாலும், பயங்கரவாதம் தொடர்பான சூழலில் முறையான விசாரணை அவசியமாகிறது” என்றார்.

“காவல்துறையின் இந்த நடவடிக்கை சில விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது, குறிப்பாக மனித உரிமை ஆர்வலர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு குழுவினர், கைது செய்யப்பட்டவர்கள் சிறுவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளனர்” என்றார்.

“காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டவர்களுக்கு எதிராக சோஸ்மா (Sosma) சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று அவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், குறிப்பாகப் பயங்கரவாதம் தொடர்பான சூழலில், விசாரணையை முழுமையாக முடிக்க காவல்துறைக்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

நேற்று இரவு இங்கு நடைபெற்ற ‘நற்பண்புகளை வளர்க்கும் திட்டம்’ மற்றும் கெடா மாநில அளவிலான நுசுல் குர்ஆன் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சைபுதீனின் கூற்றுப்படி, இந்த வழக்கு அண்டை நாடு ஒன்றின் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருந்தால், தகவல்களை உறுதிப்படுத்தவும், சம்பந்தப்பட்டவர்களின் பின்னணியை ஆராயவும் அங்குள்ள அதிகாரிகளைத் தொடர்புகொள்ள வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இருக்கும்.

“சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் சிறுவர்களாக இருந்தாலும், இந்தச் செயல்முறையை இரண்டு அல்லது மூன்று நாட்களில் மட்டும் முடித்துவிட முடியாது,” என்று அவர் விளக்கினார்.

முதற்கட்ட விசாரணைகள் மற்றும் சந்தேக நபர்களின் மின்னணு சாதனங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அந்த வயதிலேயே அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் ஏற்படும் அபாயங்களை அறிந்திருந்ததை காவல்துறை கண்டறிந்துள்ளதாக சைபுதீன் தெரிவித்தார்.

எனவே, நீண்ட காலமாக கண்காணிப்பு மற்றும் உளவுத் தகவல்களைச் சேகரித்து, கடந்த ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் மட்டும் இந்தக் கைதுகளை மேற்கொண்ட காவல்துறை குழுவின் மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். அவர்கள் இன்னும் தங்கள் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர், இறுதியில் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படும் என்று அவர் கூறினார்.

இந்தக் கைது நடவடிக்கைகள் அனைத்தும் போலீஸ் சிறப்புப் பிரிவின்  நீண்டகால மற்றும் நுணுக்கமான உளவு வேலைகளின் விளைவாகும். சமூக ஊடகங்கள் மற்றும் பல்வேறு ஆன்லைன் செயலிகள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட தீவிர கண்காணிப்பிற்குப் பிறகே இவை சாத்தியமானது” என்று அவர் விளக்கினார்.

அவரது கூற்றுப்படி, ஆன்லைன் விளையாட்டுகள் உட்பட பல்வேறு ஊடகங்களில் மறைமுகமாகப் பதிக்கப்பட்டுள்ள தீவிரவாதச் சித்தாந்தங்களைப் பரப்பும் புதிய முறைகளை விசாரணையில் போலீசார் கண்டறிந்துள்ளனர். இவை பயனர்களுக்குத் தெரியாமலேயே அத்தகைய கொள்கைகளுக்கு அவர்களை ஆட்படுத்துகின்றன.

சமூக ஊடகங்கள் மூலம் தாங்கள் பெறும் நம்பிக்கைகளுக்கும், உலக நடப்புகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாக உணரும்போது, இத்தகைய சித்தாந்தத் தாக்கம் சில நபர்களை வன்முறை சார்ந்த இயக்கங்களுக்கு ஆதரவளிக்கவோ அல்லது அவற்றில் இணையவோ தூண்டும் என்று சைபுதீன் தெரிவித்தார்.

பல்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட மலேசியா போன்ற நாட்டில், இத்தகைய சூழல் மிகவும் ஆபத்தானது என்றும், கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் நீண்டகாலமாக அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் நம் நாட்டிற்கு இது அச்சுறுத்தல் என்றும் அவர் மேலும் கூறினார்.

நேற்று, காவல்துறை தலைமை ஆய்வாளர் காலிட் இஸ்மாயில் கூறுகையில், அண்மையில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் சித்தாந்தத்தைப் புதுப்பிக்கும் முயற்சியை போலீசார் முறியடித்ததாகவும், இதில் மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பிப்ரவரி 14 முதல் இரண்டு நாட்களுக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜோகூர், கெடா மற்றும் திரெங்கானு ஆகிய இடங்களில் சிறப்புப் பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனைகளில் 16 முதல் 21 வயதுக்குட்பட்ட இந்த சந்தேக நபர்கள் பிடிபட்டதாக அவர் கூறினார்.

 

-fmt