ஆசிரியர் சமூகத்தை வலுப்படுத்த 12 புதிய திட்டங்களை அறிவித்தது அரசு

இந்த ஆண்டின் 55-வது தேசிய அளவிலான ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு, ஆசிரியர்களின் பங்களிப்பை வலுப்படுத்தவும் அவர்களை ஊக்குவிக்கவும் 12 புதிய திட்டங்களை கல்வி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

டிஜிட்டல் கல்வியறிவில் ஆசிரியர்களின் தொழில்முறை வளர்ச்சியை ஆதரிப்பதற்காக, கூகுள் சான்றளிக்கப்பட்ட கல்வியாளர் நிலை 1 மற்றும் நிலை 2 சான்றிதழ் படிப்புகள் அனைத்து ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் பத்லினா சிடெக் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்றும், இதற்கான கட்டணத் தொகையான GCE நிலை 1-க்கு ஒரு ஆசிரியருக்கு 40 மலேசிய ரிங்கிட்டையும், GCE நிலை 2-க்கு ஒரு ஆசிரியருக்கு 100 மலேசிய ரிங்கிட்டையும்  அமைச்சகமே ஏற்கும்.

மருத்துவமனை வகுப்புகள், மிதக்கும் பள்ளிகள் மற்றும் P1, P2, P3 பிரிவுகளில் உள்ள கிராமப்புற பள்ளிகள் உள்ளிட்ட பின்தங்கிய பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அமைச்சகம் சிறப்பு கூட்டாட்சி பயிற்சி விருதை வழங்கும் என்றும் பத்லினா கூறினார்.

“நமது இலக்குகளை அடைவதை உறுதி செய்வதற்காக, அவர்கள் முதுகலை மற்றும் முனைவர் (PhD) பட்டப் படிப்புகளைத் தொடர தேர்ந்தெடுக்கப்படுவார்கள். குறிப்பாக, அவர்கள் தொடர்ந்து பணியாற்ற இது வழிவகுப்பதோடு, அவர்களின் படிப்புகள் இந்த ஆசிரியர் பணிக்கு தொடர்ந்து பங்களிக்க உதவும்,” என்று பிரதமர் அன்வர் இப்ராகிம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்த இவ்விழாவில் அவர் கூறினார்.

பள்ளித் தலைவர்கள் முதுகலை (Master’s) பட்டம் பெறுவதற்காக, கூட்டாட்சி ஆசிரியர் உதவித்தொகைத் திட்டத்தை அமைச்சகம் விரிவுபடுத்தும் என்றும் ஃபத்லினா கூறினார். தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் மூத்த உதவி ஆசிரியர்கள் தங்களது படிப்பைத் தொடர இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், இணைய வசதி இல்லாத நிலையிலும் டிஜிட்டல் கற்றல் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில், (Network Offline Digital Environment – NODE) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இணையப் பயன்பாடு இன்றி ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் புவியியல் சார்ந்த சவால்களுக்கு அமைச்சகம் தீர்வு கண்டு வருவதாக ஃபத்லினா தெரிவித்தார்.

இந்தத் திட்டத்திற்காக, பின்தங்கிய சூழ்நிலைகளில் இயங்கும் கிராமப்புற மற்றும் தீவுப் பள்ளிகளில் இதன் செயல்பாட்டை வலுப்படுத்த கல்வி அமைச்சகம் 1 மில்லியன் மலேசிய ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

அடுத்த ஆண்டு துணைப்பாட நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவும், கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்பத்தை தடையின்றி ஒருங்கிணைப்பதை உறுதி செய்யவும் பள்ளிகளுக்கு சாதனங்களை வழங்குவதற்காக 169 மில்லியன் மலேசிய ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் அறைகளைப் பராமரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் கூடுதலாக 100 மில்லியன் மலேசிய ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், ஆசிரியர்கள் மிகவும் வசதியான மற்றும் சாதகமான சூழ்நிலையில் வாழ்வதை உறுதி செய்வதற்காக அவர்களின் குடியிருப்புப் பராமரிப்புக்காக 50 மில்லியன் மலேசிய ரிங்கிட் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பத்லினா கூறினார்.

துணைப்பாட நடவடிக்கைகளைப் பதிவு செய்யும் கையேடு முறை ஒழிக்கப்படும் என்றும், உடற்கல்வி, விளையாட்டு மற்றும் துணைப்பாட நன்னடத்தை மதிப்பீட்டு அமைப்பில் மாணவர்களின் தகவல்களைப் பதிவிடுவதற்கு முன்பு, பள்ளிகள் தங்களின் தேவை மற்றும் படைப்பாற்றலுக்கு ஏற்ப இந்தத் தரவுகளை நிர்வகிப்பதற்கான சுயாட்சி   வழங்கப்படும்.

இதற்கிடையில், முன்பள்ளி வாசிப்பு கலாச்சார மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள 10,515 முன்பள்ளி வகுப்புகளுக்கும் கூடுதல் வாசிப்புப் பொருட்களை வழங்குவதற்காக 10.5 மில்லியன் மலேசிய ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி மற்றும் துணைப்பாடத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக முதல் கட்டமாக 122.4 மில்லியன் மலேசிய ரிங்கிட் நிதி நேரடியாகப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டுக்கான மலேசியக் கல்விச் சான்றிதழ் தேர்வில் 10A எடுத்த பிள்ளைகளைக் கொண்ட ஆசிரியர்களுக்கு, துன் உசேன் ஓன் ஆசிரியர் அறக்கட்டளை 1,000 மலேசிய ரிங்கிட் நிதியுதவி வழங்கும் என்றும் பத்லினா தெரிவித்தார்.

பள்ளி உணவக வாடகைக் கட்டணத்தில் முதல் ஆறு மாதங்களுக்கு 50% தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்த அவர், இந்த நடவடிக்கை பள்ளிச் சமூகத்திற்கு மலிவான மற்றும் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

 

 

 

-fmt