பிகேஆர் இளைஞர் அணித் தலைவர் கட்சியிலிருந்து விலகல்: சீர்திருத்தக் கொள்கைகளிலிருந்து கட்சி தடம்மாறிவிட்டதாகக் குற்றச்சாட்டு

பிகேஆர் கட்சி தான் ஒரு காலத்தில் நம்பிய சீர்திருத்தக் கொள்கைகளிலிருந்து விலகிச் சென்றுவிட்டதாகக் கூறி, அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அஷீக் அலி சேத்தி அலிவி கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

பத்து தொகுதி பிகேஆர் தலைவர் மற்றும் கூட்டரசு பிரதேச பிகேஆர் இளைஞர் அணித் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து தாம் உடனடியாக ராஜினாமா செய்வதாக அஷீக் தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-ஆம் ஆண்டில் ‘ஷெரட்டன் நகர்வு’ மூலம் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட சில நாட்களிலேயே தாம் பிகேஆர் கட்சியில் இணைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அக்கட்சிக்கு இளைஞர்களின் ஆற்றலும் கொள்கைவாதமும் தேவை என்று தாம் நம்பியதே அதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்தில் பாதிப் பதவிக்காலத்தைக் கடந்த பிறகு, தான் நம்பிய கொள்கைகளிலிருந்து கட்சி தடம்மாறிவிட்டதாக அவர் உணர்ந்தார்.

வழக்கறிஞரும், முன்னாள் மாணவர் ஆர்வலருமான அஷீக், தனது தனிப்பட்ட கொள்கைகளுக்கும், கட்சிக்குள் வளர்ந்து வரும் “அரசியல் நடைமுறைவாதம்” என்று அவர் விவரிக்கும் கலாச்சாரத்திற்கும் இடையே தான் பெரும் மனப்போராட்டத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் கூறினார்.

பத்து நாடாளுமன்ற கூட்டரசு பிரதேச குடியிருப்பாளர்கள் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பதவியிலிருந்தும் தாம் விலகுவது குறித்து, கூட்டரசு பிரதேச அமைச்சருக்கு இரண்டு வார கால அவகாச அறிவிப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தலில், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரனை 153 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அஷீக் பத்து தொகுதி பிகேஆர் தலைவர் பதவியைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு முன்பு, அவர் பிகேஆர் இளைஞர் அணியின் சட்டம் மற்றும் சட்டப் பணியகத்தின் தலைவராக இருந்தார்.

2013 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மாணவர் பிரச்சினைகள் குறித்து குரல் கொடுத்த ஒரு மாணவர் தலைவராகவும், நஜிப் ரசாக் நிர்வாகத்தின் போது பல பேரணிகளுக்குத் தலைமை தாங்கியவராகவும் அவர் அறியப்பட்டார்.

கூட்டரசு பிரதேச பிகேஆர் தலைவர் அஸ்மான் அபிதின் விடுத்துள்ள அறிக்கையில், பத்து தொகுதித் தலைவர், கூட்டரசு பிரதேச இளைஞர் அணித் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தும் மற்றும் கட்சியிலிருந்தும் உடனடியாக விலகுவதென்ற அஷீக்கின் முடிவை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

அஷீக்கின் முடிவை தாம் மதிப்பதாகத் தெரிவித்த அஸ்மான், அவரின் பங்களிப்புகளுக்கும் சேவைக்கும் நன்றி கூறினார்.

கட்சியின் செயல்பாடுகளில் சுமூகமான மாற்றத்தையும் தொடர்ச்சியையும் உறுதி செய்வதற்காக, பத்து தொகுதித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு ஜனநாயக அரசியல் கட்சியில் தலைமைத்துவ மாற்றங்கள் என்பது இயல்பான ஒன்று என்றும், பிகேஆர் கட்சியின் பலம் எப்போதுமே அதன் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலிலும் அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவிலும் தான் வேரூன்றியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“சீர்திருத்த இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் உறுப்பினர்களுடன் நாங்கள் தொடர்ந்து முன்னோக்கி பயணிப்போம்,” என்று அவர் கூறினார்.

 

 

 

 

-fmt