அன்வாருக்கு நெருக்குதல்: இரண்டு எம்பிகள் ராஜினாமா!  

ரஃபிஸி ராம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மத் ஆகியோர், பாண்டன் மற்றும் செட்டியாவாங்சா தொகுதிகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளிலிருந்து தாங்கள் விலகுவதாக, மக்களவைத் சபாநாயகர் ஜோஹரி அப்துலுக்குத் தங்கள் அதிகாரப்பூர்வ கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், தங்களது ராஜினாமாக்கள் இன்று முதல் அமலுக்கு வருவதாக அவ்விருவரும் தெரிவித்துள்ளனர்.

“கடந்த பொதுத் தேர்தலில் நாங்கள் பக்காத்தான் ஹரப்பான் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டதால், பாண்டன் மற்றும் செட்டியாவாங்சா தொகுதி மக்களுக்கு மீண்டும் ஆணையை வழங்குவதே சரியான மற்றும் கண்ணியமான நடவடிக்கையாகும்.

“இரண்டு முறை நாடாளுமன்றத்தில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த எங்களைத் தேர்ந்தெடுத்த பாண்டன் மற்றும் செட்டியாவாங்சா வாக்காளர்களுக்கு எங்களது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

“தொகுதி மக்களுக்கு உதவியும் ஆதரவும் வழங்குவதற்காக எங்களது சேவை மையங்கள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும். வரவிருக்கும் தேர்தலில் பாண்டன் மற்றும் செட்டியாவாங்சா நாடாளுமன்றத் தொகுதிகளில் பெர்சமா சார்பில் போட்டியிடுவோம்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.