மலேசியாவில் எபோலா பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை – சுகாதார அமைச்சகம் 

காங்கோ மற்றும் உகாண்டாவிலிருந்து வருபவர்களைக் கண்காணித்து வருவதாகச் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உட்பட அனைத்து சர்வதேச நுழைவு வாயில்களிலும் கண்காணிப்பை சுகாதார அமைச்சகம் தீவிரப்படுத்தி வருகிறது.

மலேசிய சுகாதார அமைச்சகம், காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் ஏற்பட்டுள்ள கொடிய தொற்றுநோயான எபோலா (Ebola) பாதிப்பைத் தொடர்ந்து, மலேசியாவில் இதுவரை எந்தவொரு எபோலா பாதிப்பும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

துபாய், தோஹா மற்றும் சிங்கப்பூர் வழியாக நாட்டிற்குள் நுழையும் பயணிகள் உட்பட, இந்த ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க உள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.

தற்போது காங்கோ மற்றும் உகாண்டாவிலிருந்து மலேசியாவுக்கு நேரடி விமானங்கள் எதுவும் இல்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உட்பட அனைத்து சர்வதேச நுழைவு வாயில்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருவதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

“இந்த நாடுகளுக்குச் சென்ற வரலாற்றுடன், நோய்க்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும் நபர்களையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம்”.

சந்தேகிக்கப்படும் நபர்களைக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல் மற்றும் அவர்களைக் கையாளுதல் போன்றவற்றை மேம்படுத்துவதற்காக சுகாதார வசதிகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதும் அடங்கும்,” என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காங்கோவில் எபோலா பரவலின் “அளவும் வேகமும்” கவலையளிப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) நேற்று தெரிவித்திருந்தது. அங்கு இந்த நோயால் இதுவரை சுமார் 131 பேர் உயிரிழந்துள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மிகவும் வேகமாக பரவக்கூடிய இந்த இரத்தப்போக்கு காய்ச்சலின் (haemorrhagic fever) தீவிரத்தை உலக சுகாதார அமைப்பு ஒரு சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளதுடன், இந்த நெருக்கடி குறித்து அவசரக் கூட்டம் ஒன்றையும் நடத்தவுள்ளது.

கடந்த அரை நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் 15,000-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற இந்த எபோலா நோயின் தற்போதைய பரவலுக்குக் காரணமான ‘பண்டிபுகியோ’ (Bundibugyo) வகைக் காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பூசியோ அல்லது சிகிச்சை முறையோ இல்லை.

இந்த வைரஸ், பாதிக்கப்பட்ட நபரின் உடல் திரவங்கள் (bodily fluids) மூலமாக அல்லது அவர்களின் இரத்தத்துடன் ஏற்படும் தொடர்பு மூலமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கிய பின்னரே, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு இந்த நோய் பரவக்கூடும்.