பிளாரஸ் நிலநடுக்கத்தில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை

இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா (NTT) மாகாணத்தில் உள்ள பிளாரஸ் தீவில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், மலேசியர்கள் யாரும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் இல்லை.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அல்லது அங்கு பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள், விழிப்புடன் இருக்குமாறும் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நிலைமை குறித்த சமீபத்திய தகவல்களைப் பெறுவதற்காக, இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சகத்துடன் தூதரகம் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.58 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது எம்பாய் பகுதியில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் கடலுக்கு அடியில் 15 கி.மீ ஆழத்தில் மையம்கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையையும் தூண்டியது. எனினும், கடல் மட்டத்தைக் கண்காணித்த பிறகு, வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் காலை 7.31 மணிக்கு அந்த எச்சரிக்கையை வாபஸ் பெற்றது.

பிளாரஸ் தீவைத் தாக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுமார் 2,000 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர் அல்லது தப்பியோடினர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பல வலுவான அதிர்வுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது என்றும், ஆறு பேர் காயமடைந்துள்ளனர் என்றும், மேலும் இருவர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என்றும் மௌமேரே (Maumere) தேடல் மற்றும் மீட்பு அலுவலகம் தெரிவித்தது.

 

 

 

 

-fmt