அங் பாவ் பிரச்னையில் பெர்க்காசா நஜிப் மீது குறி வைக்கிறது

பெர்க்காசா ஏற்பாடு செய்த சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பின் போது தவறு நிகழ்ந்த நான்கு நாட்களுக்குப் பின்னர் வெள்ளை அங் பாவ் குறித்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெரிவித்துள்ள கருத்துக்கள், பாத்திரம் கெட்டிலைப் பார்த்து கறுப்பு எனச் சொன்னதைப் போல் (pot calling the kettle black) இருப்பதாக அந்த மலாய் வலச்சாரி அமைப்பு கூறுகிறது.

“நான் பிரதமரைக் கேட்க விரும்புகிறேன். இந்த நேரத்தில் ஸ்ரீ செத்தியாவில் பிஎன் வெள்ளை அங் பாவ் கொடுப்பதின் அர்த்தம் என்ன?” என்று பெர்க்காசா இளைஞர் பிரிவுத் தலைவர் பாஹ்மி இட்ரிஸ் நேற்றிரவு விடுத்த அறிக்கையில் வினவினார்.

“பெர்க்காசா பிரச்னையில் (வெள்ளை அங் பாவ் கொடுக்கப்பட்டது மீது) அங் பாவ் என்பது சிவப்பு என்ற அர்த்தத்தைக் கொண்டுள்ளதை அனைவரும் அறிவர். அப்போது ஏன் வெள்ளை அங் பாவ்-க்ளை பிஎன் வழங்கியது?”

சீனர் பண்பாட்டில் வெள்ளை நிறம் ஈமச் சடங்குகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பெர்க்காசா செய்த தவறைத் தற்காத்துப் பேசிய அதன் தலைமைச் செயலாளர் சையட் ஹசான் சையட் அலி அந்த விஷயத்தில் அந்த அமைப்பு மட்டும் தவறு செய்யவில்லை எனக் குறிப்பிட்டார்.

பிஎன் நடத்திய சீனப் புத்தாண்டு நிகழ்வின் போது அதில் கலந்து கொண்டவர்களுக்கு வெள்ளைக் கடித உறைகள் வழங்கப்பட்டதை காட்டும் படம் ஒன்று நாளேடு ஒன்றில் வெளி வந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

கடித உறைகளில் பிஎன் அம்னோ சின்னங்கள் இருந்தன

ஆனால் பெர்க்காசா கூறும் அந்தக் குற்றச்சாட்டை அந்த நிகழ்வில் கலந்து கொண்ட மசீச கெளானா ஜெயா தொகுதி தலைவர் ஒங் சொங் ஸ்வன் மறுத்தார். அவற்றில் பிஎன், அம்னோ சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

“நாங்கள் சீனப் புத்தாண்டின் போது மட்டுமின்றி அவற்றை ஆண்டு முழுவதும் பயன்படுத்துகிறோம். “நாங்கள் அவற்றை நோன்புப் பெருநாள், தீபாவளி ஆகியவற்றின் போதும் பயன்படுத்துகிறோம். நன்கொடைகளை வழங்கும் போதும் அவற்றைப் பயன்படுத்துகிறோம். ,” என ஒங் கூறினார்.

அவை பெர்க்காசா பயன்படுத்திய சுத்தமான வெள்ளை நிறக் கடித உறைகளிலிருந்து மாறுபட்டவை எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஆனால் அந்த விளக்கத்தை இர்வான் ஏற்றுக் கொள்ளவில்லை. “பெர்க்காசா விவகாரம் பிஎன் விநியோகம் செய்த அங் பாவ்-உடன் ஒப்பிடக் கூடாது என கெளானா ஜெயா மசீச தலைவர் ஏன் கூறுகிறார் என நான் அறிய விரும்புகிறேன்,” என்றார் அவர்.

“பெர்க்காசா கடித உறையின் நிறம் வெள்ளையாகும். பிஎன் கடித உறையின் நிறமும் வெள்ளையே. ஆகவே என்ன வேறுபாடு அது பிஎன் -னிடமிருந்து வந்தால் அது ஈமச் சடங்குகளுக்கு அல்ல என அர்த்தமா?”

“பெர்க்காசா சம்பந்தப்பட்ட வரை எல்லோரும் இரட்டை வேடம் போடுகின்றனர் என நாங்கள் தொடக்கத்திலிருந்தே சொல்லி வருகிறோம்,” என்றார் அவர்.

TAGS: