லிம் குவான் எங்-கைத் தவறாக மேற்கோள் காட்டியதை தி ஸ்டார் நாளேடு ஒப்புக் கொள்கிறது

கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த “மலேசிய சீனர்கள் அரசியல் திருப்புமுனையில்” என்னும் தலைப்பிலான மாநாட்டில் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் சொன்னதாக அவரை மேற்கோள் காட்டி வெளியிட்ட தகவல் தவறு என ஒப்புக் கொண்டு அந்தச் செய்தியை அந்த ஏடு இன்று வெளியிட்டுள்ளது.

“இரண்டு கட்சி முறை இரண்டு இன முறையாக மாறி வருகிறதா ?” என்பது மீது மசீச தலைவர் சுவா சொய் லெக்-குடன் நடந்த சொற்போரில் “மலாய்க்காரரே எப்போதும் பிரதமராக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. காரணம் மக்கள் அதனை முடிவு செய்ய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்,”என டிஏபி தலைமைச் செயலாளர் சொல்லவில்லை என்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.”

“மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட தவறுக்காக நாங்கள் வருந்துகிறோம்,” என அந்த ஆங்கில மொழி நாளேட்டின் ஆறாம் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தி கூறியது.

“மொழி பெயர்ப்பில் தவறு” என்னும் தலைப்பைக் கொண்ட அந்தச் செய்தியில் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளப்படவில்லை. அந்த மேற்கோளின் சரியான பதிப்பும் வெளியிடப்படவில்லை.

பிஎன் -னுடன் தொடர்புடைய அந்த ஏடு மன்னிப்புக் கேட்க வேண்டும் என லிம் நேற்று கோரியிருந்தார்.

“நான் சொன்னதாக கூறும் அந்த மேற்கோள் பொய்யானது, உண்மையில்லாதது. ஏனெனில் நான் அந்த சொற்போரின் போது அந்த விஷயம் குறித்துப் பேசவே இல்லை.” என்றும் லிம் குறிப்பிட்டார்.

இரண்டு பெரிய அரசியல்வாதிகள் பங்கு கொண்ட அந்த விவாதத்தை அஸ்லி என்ற ஆசிய வியூக, தலைமைத்துவக் கழகமும் இன்சாப் என்ற மசீச-வின் வியூக ஆய்வு கொள்கை ஆய்வுக் கழகமும் கூட்டாக நடத்தின.

அந்த விவாதத்தில் இரண்டு தரப்புமே தலைப்பில் கவனம் செலுத்தாமல் திசை மாறியதால் அந்த விவாதம் பெருத்த ஏமாற்றம் என்று கூட சிலர் குறிப்பிட்டுள்ளனர்.