“பிறர் எழுதியதை திருடியதாக கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது”

மூத்த நீதிபதி ஒருவர் ஜனவரி 5ம் தேதி வழங்கிய தீர்ப்பில் ‘பிறர் எழுதியதைத் திருடி சேர்த்திருப்பதின்’ அடிப்படையில் கூட்டரசு நீதிமன்றத்தில் செய்து கொள்ளப்பட்ட முறையீடு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என நிறுவனம் ஒன்று விண்ணப்பித்துக் கொண்டுள்ளது.

அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள காரணங்கள் பெரும்பாலும் முதலாவது பிரதிவாதியான ஊய் வூன் சீ எழுத்துப்பூர்வமாக சமர்பித்த வாதத் தொகுப்பின் மறுபதிப்பாக உள்ளது என சீ தியாவ் சுவான் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டும் சியா ஆ கியோ அல்லது சியா இயோ-வின் சொத்து நிர்வாகமும் மேலும் 12 பேரும் தங்கள் விண்ணப்ப மனுவில் கூறியுள்ளனர்.

விகே லிங்கம் அண்ட் கோ என்ற வழக்குரைஞர் நிறுவனம் வழியாக மறு விசாரணைக்கான விண்ணப்பம் பிப்ரவரி 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

47 பக்கங்களுக்கு நீளும் 56 பத்திகள், ஊய்க்கு எந்த விதமான அங்கீகாரமும் கொடுக்கப்படாமல் கணிசமாக காப்பியடிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த விண்ணப்பதாரர்கள் கூறிக் கொண்டனர்.

அத்துடன் அந்த எழுத்துப்பூர்வமான வாதத் தொகுப்பு பெரிதும் ஊய்க்கும் இரண்டாவது பிரதிவாதியான இங் கிம் துக்-கிற்கும் சாதகமாக உள்ளது என்றும் அவர்கள் கூறினர். அந்த வழக்கு  Kian Joo Can company சம்பந்தப்பட்டதாகும்.

“ஆகவே கூட்டரசு நீதிமன்றம், பிரதிவாதியின் எழுத்துப்பூர்வமான வாதத் தொகுப்பின் உள்ளடக்கத்தை கணிசமாக எடுத்துக் கொண்டதின் மூலம் கூட்டரசு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட முறையீடுகள் மீது ஒரு தலைச் சார்பான, பாகுபாடான கருத்தை எடுத்துக் கொண்டுள்ளது.”

“தீர்ப்புக்கான காரணங்களை வழங்கிய கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் குழு விண்ணப்பதாரரின் வழக்குரைஞர் சமர்பித்த வாதங்களை பரிசீலிக்கவே இல்லை,” என்றும் விண்ணப்பதாரர்கள் கூறினர்.