மெக்கானிக்: “ஒப்புக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்த என் தலை மீது துப்பாக்கி குறி வைக்கப்பட்டது”

காஜாங்கில் நான்கு நாட்களுக்கு முன்பு தமது காருக்கு பெட்ரோல் நிரப்பிய பின்னர் எட்டு ரேலா உறுப்பினர்கள் தம்மை நிறுத்தி, தாக்கியதாக 42 வயது மெக்கானிக் ஒருவர் கூறிக் கொண்டுள்ளார்.

அதற்கும் மேலாக, தாமிங் ஜயா போலீஸ் நிலையத்துக்குத் தம்மை அந்த ரேலா அதிகாரிகள் கொண்டு சென்றதாகவும் கார் லாரி திருட்டு குற்றத்தை தாம் ஒப்புக் கொள்ள வேண்டும் என விரும்பிய நான்கு போலீஸ் அதிகாரிகள் தம்மைத் தாக்கியதாகவும் அவர் சொன்னார்.

பலகோங்கில் உள்ள தமது பட்டாறைக்கு உதவி செய்ய வருமாறு தமது நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்ட பின்னர் அவரைச் சந்திக்க சென்ற காலை மணி 5.00  வாக்கில் அந்தத் துயர நாடகம் தொடங்கியதாக எஸ் மோகன் என்ற அந்த மெக்கானிக் கூறினார்.

“நான் அங்கு செல்வதற்கு முன்னர் என் காருக்கு பெட்ரோல் நிரப்பிக் கொள்ள முடிவு செய்தேன். காரணம் பின்னர் நான் என் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப விரும்பினேன். நான் பெட்ரோல் நிரப்பியதும் என்னை தடுத்து நிறுத்திய ரேலா உறுப்பினர்கள் கார் திருடியதாகக் குற்றம் சாட்டினர்.”

“அவர்கள் என்னுடைய நிசான் சன்னி காரை சோதனை செய்தனர். பல உபரிப் பாகங்களை வைத்துள்ளதை அவர்கள் பார்த்தனர். நான் மெக்கானிக் என்று அவர்களிடம் கூறினேன். ஆனால் அவர்களில் ஒருவர் இரும்புக் கம்பியைப் பயன்படுத்தி எனது இடது காலைத் தாக்கினார். மற்ற ரேலா உறுப்பினர்களும் என்னைத் தாக்கினர். உடம்பிலும் முதுகிலும் குத்தினர். உதைத்தனர்..”

பின்னர் ரேலா உறுப்பினர்கள் தம்மை தாமிங் ஜயா போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றதாகவும் அங்கு அவர்கள் தம்மை போதைப் பித்தர் என அங்கிருந்த போலீசாரிடம் கூறியதாகவும் மோகன் சொன்னார்.

அங்கு போலீஸ் அதிகாரிகள் என்னை தண்ணீர் குழாயைக் கொண்டு தாக்கியதாகவும் காலில் அடித்ததாகவும் அவர் தெரிவித்தார். கார்களையும் லாரிகளையும் திருடியதை தாம் ஒப்புக் கொள்ள வேண்டும் என அவர்கள் விரும்பினர்.

“ஒரு கட்டத்தில் அவர்களில் ஒருவர் என் தலை மீது துப்பாக்கியைக் குறி வைத்து நான் ஒப்புக் கொள்ளாவிட்டால் கொல்லப் போவதாக மருட்டினார்.”