புதிய எம்ஏசிசி கட்டிடத்தில் கட்டுமானக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன

மலாக்கா அலாயில் ஒராண்டுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையக் கட்டிடத்தில் கசிவுகள் ஏற்பட்டுள்ளன. கட்டுமானக் கோளாறுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.   பல இடங்களில் பூசணம் ( fungus ) பிடித்துள்ளது.

23.4 மில்லியன் ரிங்கிட் செலவில் அந்தக் கட்டிடம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கட்டி முடிக்கப்பட்டது. அந்தக் கட்டிடத்தில் பல இடங்களில் “பூசணம் பிடித்துள்ளதாக” பொதுப் பணி அமைச்சர் ஷாஸிமான் அபு மான்சோர் கூறினார். பல இடங்களில் தண்ணீர் கசிவும் ஏற்பட்டுள்ளது.

மழையும் அலைப் பெருக்கும் தண்ணீர் கசிவுகளுக்குக் காரணம் என அமைச்சர் சொன்னதாக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டிடம் தெலுக் மாஸ் கடலோரத்தில் அமைந்துள்ளது.

“கட்டிடத்தில் பூசணம் பிடித்ததற்கான காரணத்தை அடையாளம் காணுமாறு நான் பொதுப் பணித் துறைக்கும் ஆலோசகர் நிறுவனத்துக்கும் ஆனையிட்டுள்ளேன். விவரமாக ஆய்வு செய்து நீர் கசியும் இடங்கள் பற்றித் தெரிவிக்குமாறு கூறியுள்ளேன்..” என அந்தக் கட்டிடத்தை இரண்டு மணி நேரத்துக்குப் பார்வையிட்ட பின்னர் அமைச்சர் சொன்னார்.

என்றாலும் கட்டுமானக் கோளாறுகளும் பூசணமும் இருந்த போதிலும் 54 எம்ஏசிசி ஊழியர்களும் வேலை செய்வதற்கு இன்னும் பாதுகாப்பானது என ஷாஸிமான் உறுதி அளித்தார்.

அந்த நாளேடு பெரிய துவாரங்களைக் கொண்ட கம்பளங்களைக் காட்டும் படம் ஒன்றையும் அந்த ஏடு வெளியிட்டுள்ளது.