எதிர்த்தரப்பு ஒரு போதும் திருப்தி அடையாது என்கிறார் இப்ராஹிம் அலி

எதிர்க்கட்சிகள் அதிகாரத்தில் இல்லாத வரை தேர்தல் நடைமுறைகளில் செய்யப்படும் சீர்திருத்தங்களில் ஒரு போதும் திருப்தி அடைய மாட்டா என பாசிர் மாஸ் சுயேச்சை உறுப்பினர் இப்ராஹிம் அலி கூறுகிறார்.

“அவை அதிகாரத்தில் இல்லாத வரையில் இசி என்ற தேர்தல் ஆணையம் தூய்மையானதாக இல்லை என தொடர்ந்து கூறும்.  எதிர்க்கட்சிகள் கலவரத்தை மூட்டக் கூடும் என்பதால் பொதுத் தேர்தல் விதிமுறைகளை அமலாக்குவதில் இசி உறுதியாக நடந்து கொள்ள வேண்டும்.”

“இப்போது தேர்தல் நடைமுறைகளை விரிவுபடுத்துவதில் திறந்த போக்கைப் பின்பற்றும் பிரதமரை (நஜிப் அப்துல் ரசாக்) நாம் பெற்றுள்ளோம். ஆனால் எதிர்க்கட்சிகள் திருப்தி அடையவில்லை. அது அவற்றின் அரசியல் ஆட்டம்,” என்றார் இப்ராஹிம்.

மக்களவையில் 2012ம் ஆண்டுக்கான தேர்தல் குற்றங்கள் (திருத்தங்கள்) மசோதா மீதான அவர் கலந்து கொண்டு பேசினார்.

சில தரப்புக்கள் தங்களது சொந்த நலனுக்காக குறிப்பிட்ட பகுதிகளுக்கு வாக்காளர் பெயர்களை மாற்றும் வரையில் வாக்காளர் பட்டியலை முழுமையாகத் தூய்மைப்படுத்துவது சிரமம் என்றும் இப்ராஹிம் சொன்னார்.

அவருக்கு முன்பு பேசிய எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், சந்தேகத்துக்குரிய 42,000 வாக்காளர்களுடைய பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவ்வாறு நீக்குவதின் மூலம் அந்த பட்டியல் 100 விழுக்காடு தூய்மையானதாக இருக்கும் என்றார் அவர்.

“அந்த 0.3 விழுக்காடு என்ற சிறிய எண்ணிக்கையாக இருந்தாலும் அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் அல்லது பாரிசான் நேசனல் வெற்றி பெறுகிறதா அல்லது தோல்வி அடைகிறதா என்பதை நிர்ணயம் செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்தும்,” என அந்த மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்ட போது சொன்னார்.

பெர்னாமா